காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவரை தேர்ந்தெடுப்பது தொடர்பாக தேர்தல் நடத்துவது குறித்து நவம்பர் 20-ந் தேதி திங்கள்கிழமை அன்று நடைபெறும் காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என அக்கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்சித் தலைவர் தேர்தல் தொடர்பாக வரும் திங்கள்கிழமை காலை 10.30 மணியளவில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியானது.
காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா உள்ளார். அவருக்கு தொடர்ந்து உடல்நலக் குறைவு ஏற்பட்டு வருகிறது. இதனால் அன்றாட கட்சிப் பணிகளில் அவரால் சரிவர கவனம் செலுத்த முடிவதில்லை.
மேலும் சோனியாவை தொடர்ந்து ஓய்வில் இருக்கும்படி அவரது மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் கட்சி தொடர்பான கூட்டங்களில் பங்கேற்பதில்லை.
அதுமட்டுமல்லாமல் சமீபத்தில் நடக்கவுள்ள குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் நடந்து முடிந்த ஹிமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் ஆகியவற்றுக்கு சோனியா மகன் ராகுல் தலைமையில் பிரசாரங்கள் நடைபெற்றன.
இதனிடையே, காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவராக ராகுல் வரவேண்டும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அவ்வப்போது இதுதொடர்பாக கோரிக்கையும் வைக்கப்படுகிறது.
கடந்த முறை நடைபெற்ற கட்சித் தேர்தலின் போது காங்கிரஸ் துணைத் தலைவராக ராகுல் பொறுப்பேற்றார். தற்போது கட்சி தொடர்பான அனைத்து விவகாரங்களையும் ராகுல் கவனித்து வருகிறார்.
இந்நிலையில், அக்டோபர் 13-ந் தேதி நடந்த செய்தியாளர்களின் சந்திப்பின் போது, காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவராக ராகுல் விரைவில் நியமிக்கப்படுவார் என்று அவரது தாயாரும், காங்கிரஸ் கட்சியின் தலைவருமான சோனியா தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.