புதுதில்லி: நாம் பயன்படுத்திய பொருட்களை விற்பனை செய்ய பேஸ்புக் இந்திய செயலியில் 'மார்கெட்பிளேஸ்' என்னும் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
உலகளவில் பிரபலமான சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் தற்பொழுது நாம் பயன்படுத்திய பொருட்களை விற்பனை செய்ய, பேஸ்புக் இந்திய செயலியில் 'மார்கெட்பிளேஸ்' என்னும் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
முதன்முறையாக சோதனை முயற்சியாக தற்பொழுது மும்பையில் மட்டும் இவ்வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கிடைக்கும் வரவேற்பினைப் பொறுத்து நாட்டின் பிற பகுதிகளிலும் இந்த வசதி வழங்கப்பட இருக்கிறது.
இந்த 'மார்கெட்பிளேஸ்' வசதி மூலம் பேஸ்புக் பயனாளர்கள் தங்கள் பயன்படுத்திய பொருட்களை விற்பனை செய்யவும், அதேசமயம் மற்றவர்கள் இதேபோன்று விற்பனைக்கு பதிவிட்ட பொருட்களை வாங்கவும் முடியும்.
பேஸ்புக்கின் மார்கெட்பிளேஸ் சேவை தற்போதைய நிலையில் அமெரிக்கா உள்பட உலகின் 25 நாடுகளில் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவினைப் பொறுத்த வரை தற்பொழுது ஓ.எல்.எக்ஸ். மற்றும் குவிக்கர் போன்ற இணைய தளங்கள் இச்சேவையினை வழங்கி வருகுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பேஸ்புக்கினைப் பொறுத்த வரை ஒவ்வொரு மாதமும் 200 கோடி பயனாளர்கள் இருக்க கூடிய பேஸ்புக் குழுக்களைக் கொண்டு இந்த விற்பனை செயல்பாடு நடைபெறும் என்று பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.