தனிநபர்களின் ஆதார் விவரங்கள் மத்திய, மாநில அரசுகளின் 210 இணையதளங்களில் வெளியான பரபரப்பு தகவல் தற்போது தெரிய வந்துள்ளது.
அரசு பொது நலத் திட்டங்களின் பயன்களைப் பெறுவதற்கும், மானியங்களைப் பெறுவதற்கும் மக்கள் தங்களது ஆதார் விவரத்தை கட்டாயம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதேபோல், செல்லிடப் பேசி எண், வங்கிச் சேவை போன்றவற்றுக்கும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, மக்களிடம் இருந்து பெறப்படும் ஆதார் விவரம் கசிய விடப்படுவதாகவும், தனியார் நிறுவனங்களுக்கு அளிக்கப்படுவதாகவும் அடுத்தடுத்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.
ஆதார் சேவையை அளித்து வரும் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்திடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ், ஆதார் விவரங்கள் வெளியானது குறித்து தகவல் கேட்கப்பட்டிருந்தது. அதற்கு அந்த ஆணையம் அளித்துள்ள பதிலில், "மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் 210 இணையதளங்களில் பயனாளர்களின் ஆதார் விவரங்கள் வெளியாகியிருந்தன. அதில் சம்பந்தப்பட்ட பயனாளியின் பெயர், முகவரி, ஆதார் எண் உள்ளிட்டவை இடம்பெற்றிருந்தன. இதுகுறித்து இந்திய தனித்துவ அடையாள ஆணையத்துக்கு தெரிய வந்ததும், சம்பந்தப்பட்ட இணையதளங்களில் வெளியாகியிருந்த ஆதார் விவரங்களை நீக்க நடவடிக்கை எடுத்தது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் பராமரிக்கப்படும் ஆதார் விவரங்களுக்குள் எப்போது ஊடுருவல் நடைபெற்றது? என்பது குறித்து அந்த ஆணையம் தெரிவிக்கவில்லை. ஆனால், தங்கள் ஆணையத்தால் அந்த விவரங்கள் வெளியிடப்படவில்லை என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் குறிப்பிட்டுள்ளது.