திவாலாகும் சொத்துகளை மோசடியாளர்கள் வாங்குவதைத் தடுக்க நடவடிக்கை: வங்கிகளுக்கு நிதியமைச்சகம் அறிவுறுத்தல்

திவாலாகும் சொத்துகளை விற்பனை செய்யும்போது, அவற்றை வேண்டுமென்றே கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்கள் வாங்காமல் இருப்பதை வங்கிகள் உறுதிசெய்ய வேண்டும் என்று 

திவாலாகும் சொத்துகளை விற்பனை செய்யும்போது, அவற்றை வேண்டுமென்றே கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்கள் வாங்காமல் இருப்பதை வங்கிகள் உறுதிசெய்ய வேண்டும் என்று மத்திய நிதியமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
 கடந்த 2015-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், ரூ.2.78 லட்சம் கோடியாக இருந்த வாராக் கடன், கடந்த ஜூன் மாதத்தில் ரூ.7.33 லட்சம் கோடியாக அதிகரித்துவிட்டது. வாராக் கடன் தொகை, அளவுக்கு அதிகமாக உயர்ந்துவிட்டதால், அவற்றை வசூலிப்பதற்கு ரிசர்வ் வங்கி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
 இந்த நிலையில் முதல் கட்டமாக, ரூ.5,000 கோடிக்கும் அதிகமாகக் கடன் நிலுவை வைத்திருக்கும் 12 நிறுவனங்களிடம் இருந்து, கடனை வசூலிப்பதற்கு வங்கிகள் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளன. 12 நிறுவனங்கள் வாங்கியிருக்கும் மொத்தக் கடன் மதிப்பு, ரூ.1.75 லட்சம் கோடியாகும். இது மொத்த வாராக் கடன் மதிப்பில் 25 சதவீதமாகும்.
 இந்த நிலையில், தேசிய நிறுவனச் சட்டத் தீர்ப்பாயம் மூலமாக, அந்த நிறுவனங்களின் சொத்துகளை விற்பனை செய்து, கடனை சரி செய்யும் நடைமுறையை வங்கிகள் தொடங்கவுள்ளன. இதனிடையே, வங்கிகளுக்கு மத்திய நிதியமைச்சகம் ஓர் அறிவுறுத்தலை அனுப்பியுள்ளது.
 இதுதொடர்பாக, மத்திய நிதியமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:
 திவால் சட்டப்படி, விற்பனை செய்யப்படும் சொத்துகளை வாங்குவதற்கு வேண்டுமென்றே கடன் செலுத்தாத சிலர் ஆர்வத்துடன் இருப்பதாக நிதியமைச்சகத்துக்குத் தகவல் கிடைத்துள்ளது. எனவே, திவாலாகும் சொத்துகளின் விற்பனை வெற்றிகரமாக நடைபெற வேண்டுமெனில், அந்தச் சொத்துகளை, வேண்டுமென்றே கடன் செலுத்தாதவர்கள், வாங்காமல் இருப்பதை வங்கிகள் உறுதிப்படுத்த வேண்டும் என்று வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார் அந்த அதிகாரி.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com