கோரக்பூர்: பத்மாவதி படத்துக்கு மிரட்டல் விடுப்பவர்கள் குற்றவாளிகள் என்றால் பன்சாலி மட்டும் ஒன்றும் அவர்களுக்கு குறைந்தவர் இல்லை என்று உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
ராஜபுத்திர சமூகத்தைச் சேர்ந்த ராணி பத்மினியின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் வகையில் பத்மாவதி திரைப்படத்தை இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி உருவாக்கியுள்ளார். ராணி பத்மாவதிவாதியாக பிரபல நடிகை தீபிகா படுகோன் நடித்துள்ளார். ஆனால் இப்படத்தில் ராணி பத்மாவதி பற்றி தவறாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டி ராஜபுத்திர அமைப்புகள் போராட்டத்தில் குதித்துள்ளார்கள்.
தற்போது இந்த விவகாரத்தை ஹரியானாவில் உள்ள பல்வேறு இந்து அமைப்புகள் மற்றும் பாஜக கையிலெடுத்துள்ளன. நடிகை தீபிகா படுகோனே, இயக்குநர் பன்சாலி ஆகியோர் தலைக்கு அதிகபட்சமாக ரூ10 கோடி என உச்சகட்ட போராட்ட வெறியையும் வெளிப்படுத்தியுள்ளனர்.
இதன் காரணமாக டிசம்பர் 1-ஆம் தேதி வெளியிடப்பட்ட வேண்டிய திரைப்படம் ஏற்கனவே தயாரிப்பாளர்களால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது,
இந்நிலையில் பத்மாவதி படத்துக்கு மிரட்டல் விடுப்பவர்கள் குற்றவாளிகள் என்றால் பன்சாலி மட்டும் ஒன்றும் அவர்களுக்கு குறைந்தவர் இல்லை என்று உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் அவர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போழுது அவர் கூறியதாவது:
பொதுமக்களின் உணர்வுகளுடன் விளையாடுவதையே சஞ்சய் லீலா பன்சாலி வழக்கமாகக் கொண்டுள்ளார். சட்டத்தினை கையில் எடுத்துக் கொள்வதற்கு யாருக்கும் உரிமையில்லை. அது சஞ்சய் லீலா பன்சாலியாக இருந்தாலும் சரி; அல்லது வேறு யாராக இருந்தாலும் சரி.
படத்தில் நடித்தவர்களுக்கு மிரட்டல் விடுபவர்கள் குற்றவாளிகள் என்றால், பன்சாலி மட்டும் ஒன்றும் அவர்களுக்கு குறைந்தவர் இல்லை என்று நான் கருதுகிறேன்.
ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக இருந்தால் அது இரண்டு தரப்பினர் மீதும்தான் இருக்கும்.
தொடர்ச்சியாக இது போன்ற மிரட்டல்கள் விடுக்கப்படுவது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், 'ஒவ்வொருமருமே அடுத்தவரது உணர்வுகளை மதிக்க வேண்டும். எல்லோரும் நல்ல நோக்கமும் சிந்தனைகளும் உடையவர்களாக இருந்தால், சமூகத்தில் விரோதமே இருக்காது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.