புதுதில்லி: நாடு முழுவதும் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் சம்பளத்தினை முன்தேதியிட்டு உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு என இரண்டிற்கும் கூட்டங்கள் நடைபெற்றது.
கூட்டத்தின் முடிவில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி நாடு முழுவதும் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் சம்பளத்தினை முன்தேதியிட்டு உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை ஒட்டி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நீதிபதிகளின் ஊதியம், பணிக்கொடை மற்றும் ஓய்வூதியம் ஆகியன உயரவுள்ளது.
இந்த சம்பள உயர்வானது முன்தேதியிட்டு 2016, ஜனவரி 1-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.