பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள ஹிந்தி திரைப்படமான பத்மாவதியை குஜராத்தில் வெளியிட அம்மாநில அரசு தடை விதித்துள்ளது.
இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் நடிகை தீபிகா படுகோனேவின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் "பத்மாவதி'. பழங்கால கவிதையில் குறிப்பிடப்பட்டுள்ள ராணி பத்மினியின் கதாபாத்திரத்தைத் தழுவி எடுக்கப்பட்டுள்ள இந்தத் திரைப்படமானது டிசம்பர் 1-ஆம் தேதி திரைக்கு வருவதாக இருந்தது. ஆனால், இந்தத் திரைப்படத்தில் ராணி பத்மாவதி தரக்குறைவாக சித்திரிக்கப்பட்டதாகக் கூறி வட மாநிலங்களில் ராஜபுத்திர சமூகத்தினரும், பாஜகவினரும் பெரிய அளவில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அதேபோல், தில்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜியின் வாழ்க்கை வரலாற்றையும் இத்திரைப்படம் தவறாக சித்திரிப்பதாகக் கூறி இஸ்லாமியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக, பத்மாவதி திரைப்பட வெளியீட்டு தேதி காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள பத்மாவதி திரைப்படத்தை குஜராத்தில் வெளியிட அம்மாநில அரசு தடை விதித்துள்ளது. இதுதொடர்பான அறிவிக்கையையும் குஜராத் அரசு புதன்கிழமை வெளியிட்டது.
அறிக்கை கேட்கிறது நாடாளுமன்றக் குழு: இதனிடையே, பத்மாவதி திரைப்பட விவகாரம் தொடர்பாக பரிசீலித்து வரும் மக்களவைக் குழு, அத்திரைப்படம் குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு மத்திய செய்தி - ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தையும், தணிக்கை வாரியத்தையும் கேட்டுக்கொண்டுள்ளது.