உலகத் தரத்துக்கு கல்வி முறையை மேம்படுத்தும் விதமாக 5 ஆயிரம் பள்ளிகளில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வெள்ளிக்கிழமை அறிவித்தார்.
தெலுங்கானாவுடனான பிரிவுக்குப் பிறகு ஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகராக அமராவதியை அறிவித்து அதற்காக கட்டமைப்பை தொடங்கினார் அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு.
மேலும், புதிய தலைநகர் உலகத் தரத்தில் இருக்கும் விதமாக பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளை மேம்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், ஆந்திர மாநிலத்தின் கல்வியை அடுத்தகட்டத்துக்கு கொண்டு செல்லும் விதமாக அதனை நவீனப்படுத்தும் முயற்சிகளில் தற்போது ஈடுபட்டுள்ளார்.
அதன் ஒரு பகுதியாக உலகத் தரத்துக்கு கல்வி முறையை மேம்படுத்தும் விதமாக பள்ளிகளில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி அறிவிப்பு வெளியிட்டார்.
ஆந்திர மாநிலத் தலைநகரான அமராவதியில் உள்ள மந்ததம் என்ற கிராமத்தில் இருக்கும் சிலா பரிஷத் உயர்நிலைப் பள்ளியின் டிஜிட்டல் முறை கல்வி திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அப்போது, மாநிலம் முழுவதும் உள்ள 5 ஆயிரம் பள்ளிகளில் விரைவில் இத்திடம் நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.
மேலும், பள்ளி மாணவர்களிடம் இந்த திட்டம் குறித்து அவர்களது கருத்து மற்றும் யோசனைகளை கேட்டறிந்தார்.