நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் வருகிற டிசம்பர் 15-ந் தேதி முதல் ஜனவரி 5-ந் தேதி வரை நடைபெறும் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அறிவித்துள்ளது.
14 நாட்கள் நடக்கும் இந்த கூட்டத் தொடரில் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் கிறிஸ்துமஸ் காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த நிகழ்வின் போது முக்கிய திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றத் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கூறியதாவது:
தற்போது நடைபெறவுள்ள குளிர்கால கூட்டத் தொடர் ஒரு சம்பிரதாய நிகழ்வாகவே காணப்படும். இதனால் நாட்டுக்கு எந்தப் பலனும் ஏற்படப்போவதில்லை.
இந்த கூட்டத் தொடருக்கான தேதி அறிவிப்பு எல்லாம் வெறும் கண் துடைப்பு நாடகம். எப்படியும் இந்த கூட்டத் தொடரை நல்ல முறையில் நடத்திட பாஜக விடுவதாகத் தெரியவில்லை.
ஏனென்றால் அவர்களால் நாட்டின் முக்கியப் பிரச்னைகள் குறித்து பேசத் தயாராக இல்லை. அதற்கான நேரமும் அவர்களிடம் இல்லை. இதன்மூலம் தங்களுக்கு தேவையானவற்றை மட்டும் பாஜக செய்ய முற்படும். இவையெல்லாம் வெறும் நாடகம்.
இருப்பினும் இந்த குளிர்கால கூட்டத் தொடரின் போது சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி), பணமதிப்பிழப்பு விவகாரம், பயங்கரவாதம், ஹபீஸ் சயீது உள்ளிட்ட முக்கிய பிரச்னைகள் குறித்து காங்கிரஸ் நிச்சயம் கேள்வி எழுப்பும் என்றார்.
முன்னதாக, நடப்பு ஆண்டின் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடர்பாக எவ்வித அறிவிப்பையும் பாஜக வெளியிடவில்லை என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் குற்றஞ்சாட்டின.
இதன்பின்னர் தேதிகள் அறிவிக்கப்பட்டு, கூட்டத் தொடரை நல்ல முறையில் நடத்திக் கொடுக்குமாறு பாஜக-வின் மத்திய அமைச்சர் அனந்த் குமார் கோரிக்கை வைத்தார்.