இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், மேற்குவங்க கிரிக்கெட் சங்கத் தலைவருமான சௌரவ் கங்குலியின் சகோதரர் சினேஹாஷிஷுக்கு புதன்கிழமை திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அப்போது அவரை ஆய்வு செய்த மருத்துவர்கள் டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
இதையடுத்து சிகிச்சை பெற்று வரும் கங்குலியின் சகோதரருக்கு தற்போது படிப்படியாக உடல்நலன் முன்னேறி வருவதாக சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், கொல்கத்தா மாநகராட்சி ஊழியர்கள் கங்குலியின் இல்லத்தில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அவரது இல்லத்தில் டெங்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஏடிஸ் வகை கொசுக்கள் உற்பத்தியாவதைக் கண்டுபிடித்தனர்.
எனவே இல்லம் முழுவதும் சுத்தமாக வைத்திருக்கும்படி அறிவுறுத்தியது மட்டுமல்லாமல் இதுதொடர்பாக போதிய விழிப்புணர்வு ஏற்படுத்திய பிறகும் டெங்கு கொசு உற்பத்தி ஏற்பட்டது குறித்து நோட்டீஸ் அனுப்பினர்.
இவ்விகாரம் தொடர்பான தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும், மாநகராட்சிக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும் சௌரவ் கங்குலி உறுதியளித்தார்.
மேற்குவங்கத்தில் மட்டும் டெங்கு பாதிப்பு காரணமாக கடந்த ஜனவரி முதல் தற்போது வரை மொத்தம் 35 பேர் உயிரிழந்துள்ளதாக கொல்கத்தா மாநகராட்சி ஊழியர்கள் தெரிவித்தனர்.