கேரள திரையுலகில் முக்கிய நடிகரான பஹத் ஃபாசில், நடிகை அமலா பால் ஆகியோருக்கு எதிராக வாகனப் பதிவில் வரி ஏய்ப்பு செய்ததாகக் குற்றம்சாட்டி கேரள காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:
பகத் ஃபாசில், அமலா பால் ஆகியோர் ஆடம்பர கார் வாங்குவதற்காக தங்களது சொந்த மாநிலமான கேரளத்தில் வங்கியில் இருந்து கடன் வாங்கினர். இங்கு, அந்தக் கார்களை வாங்கினால் 20 சதவீத வரி கட்ட வேண்டியிருக்கும்.
எனவே, இருவரும் ஆடம்பரக் கார்களை யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் வாங்கினர். வாகனங்களின் பதிவுக்கு அந்த மாநிலத்தில் வசிப்பதுபோல் போலி இருப்பிட ஆவணங்களை அளித்துள்ளனர்.
இதன்மூலம், ரூ.20 லட்சத்துக்கு வரி ஏய்ப்பு நடைபெற்றுள்ளது தெரியவந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக இருவருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று போலீஸார் தெரிவித்தனர்.