மோடி அரசு தனக்குப் பிடிக்காத ஒன்றை அழிப்பதற்கு எந்த எல்லைக்கும் செல்லும்: சீறிய திரைப்பட இயக்குநர்!

மோடி அரசு தனக்குப் பிடிக்காத ஒன்றை அழிப்பதற்கு எந்த எல்லைக்கும் செல்லும்: சீறிய திரைப்பட இயக்குநர்!

தனக்குப் பிடிக்காத ஒன்றை அழிப்பதற்கு மோடி அரசு எந்த எல்லைக்கும் செல்லும் என்று மலையாள திரைப்பட  இயக்குநர் சணல்குமார் சசிதரன் தெரிவித்துள்ளார்.

பனாஜி: தனக்குப் பிடிக்காத ஒன்றை அழிப்பதற்கு மோடி அரசு எந்த எல்லைக்கும் செல்லும் என்று மலையாள திரைப்பட  இயக்குநர் சணல்குமார் சசிதரன் தெரிவித்துள்ளார்.

மலையாள இயக்குநர் சணல்குமார் சசிதரன் இயக்கிய சர்ச்சைக்குரிய படமான ‘செக்ஸி துர்கா’ கோவாவில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் 'இந்தியன் பனோராமா' எனும் பிரிவில் முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்தப் பட்டியல் மத்திய செய்தி மற்றும் ஒளிபரப்பு துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டபோது ‘செக்ஸி துர்கா’ மற்றும் மராத்திய படமான ‘நியூட்’ ஆகிய இரண்டு படங்களை அதிலிருந்து  அக்குழு நீக்கிவிட்டது. எனவே ‘செக்ஸி துர்கா’  படத்தினை விழாவில் திரையிட அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

இத்திரைப்படத்தின் தலைப்பினால் சர்ச்சை எழுந்ததால், செக்ஸி துர்கா என்ற பெயரை Sxxx Durga என்று படக்குழுவினர் மாற்றினர். ஆனாலும் அனுமதி கிடைக்காத காரணத்தினால் கேரளா உயர்நீதிமன்றத்தில் இயக்குநர் சணல்குமார் சசிதரன் முறையிட்டார் . இதை விசாரித்த நீதிமன்றம் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் ‘செக்ஸி துர்கா’வை திரையிடுமாறு திரைப்படவிழா கமிட்டிக்கு உத்தரவிட்டது.

ஆனாலும் விழாவின் இறுதி நாளான நேற்று மாலை Sxxx Durga  திரையிடபப்டுவதாக இருந்தது. ஆனாலும் படத்தின் தலைப்பு குறித்து மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் புதிதாய் சர்ச்சையினை  கிளப்பியதால் திரைப்படம் விழாவில் திரையிடப்படவே இல்லை

இந்நிலையில் புதன்கிழமை காலை இயக்குநர் சணல்குமார் சசிதரன் தனது முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது:

நான் துளிகூட வருத்தப்படவில்லை.மாறாக சங் பரிவாரங்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன பிரச்னை என்று கேட்டு வந்த நிறைய பேருக்கு, என்ன ஆகும் என்ற நிலையினைப் புரிந்து கொள்ள எனது படம் உதவி புரிந்திருப்பதில் மகிழ்ச்சிதான்.  

தனக்குப் பிடிக்காத ஒன்றை அழிப்பதற்கு மோடி அரசு எந்த எல்லைக்கும் செல்லும் என்பது இதன் மூலம் தெளிவாகியுள்ளது.

இதற்காக அவர்கள் சட்டத்தினைத் தவறாகப் பயன்படுத்துதல் அல்லது சட்ட அமைப்பினைப் புறக்கணித்தல் போன்றவற்றைச் செய்கிறார்கள். இதன் பொருட்டு சட்டத்தினை மதிக்கா விட்டால் கூட உங்களுக்கு ஒன்றும் ஆகாது என்று அதிகாரிகளுக்கு உறுதி அளிக்கிறார்கள். இது மிகவும் ஆபத்தான போக்காகும்.

இந்த நிகழ்ச்சியின் காரணமாக இந்த அரசினை ஆதரிப்பதாக அறிவித்தவர்கள் கூட தற்பொழுது மன அழுத்தத்திற்கு உள்ளாகி, ஒரு எதிர்ப்பு அலை வெகுவாகப் பரவி வருவதை உணர முடிகிறது.

இவ்வாறு அவர் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.    

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com