சென்னை, மும்பை உள்ளிட்ட நகரங்களில் அமைந்துள்ள 5 இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் (ஐஐடி) மற்றும் சூரத்கல் தேசியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் (என்ஐடி) ஆராய்ச்சிப் பணிகளுக்காக ரூ.2,066 கோடி கடனுதவி வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அந்தத் தொகையானது வட்டியில்லாத கடனாக அளிக்கப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
சென்னை, மும்பை, தில்லி, காரக்பூர், கான்பூர் ஆகிய நகரங்களில் அமைந்துள்ள ஐஐடி நிறுவனங்களுக்கும், சூரத்கல் பகுதியில் உள்ள என்ஐடி நிறுவனத்துக்கும் அந்தக் கடன் தொகை பகிர்ந்தளிக்கப்பட உள்ளது. மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் மற்றும் கனரா வங்கி ஆகியவை இணைந்து இக்கடனுதவியை வழங்குகின்றன.
அதில் ரூ.1,028 கோடி ஆராய்ச்சிப் பணிகளுக்காகவும், ரூ.1,038 கோடி உள்கட்டமைப்பு வசதிகளுக்காகவும் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.
இதுகுறித்து சுட்டுரையில் (டுவிட்டர்) பதிவிட்டுள்ள மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர், "புதிய கண்டுபிடிப்புகளுக்கும், ஆராய்ச்சிகளுக்கும் நிதியுதவி அளிக்க முடிவு எடுக்கப்பட்டதால், இது ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க தினமாக மாறியுள்ளது' என்று தெரிவித்துள்ளார்.