மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு நடந்த தூய்மை இந்தியா திட்டத்தின் 3-ஆவது ஆண்டு விழாவில் அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் பங்கேற்றார்.
இதில் அவர் பேசியதாவது:
திருநங்கைகளுக்கான தனிக்கழிவறை போபால் நகராட்சியின் உதவியுடன் முதல்கட்டமாக இங்கு அமைக்கப்படுகிறது. திருநங்கைகள் சமுதாயம் முன்னேறும் வகையில் விரைவில் அவர்களுக்கென தனி கிராமம் ஏற்படுத்தித் தரப்படும்.
ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் செலவில அனைவருக்கும் வீடுகள் அமைத்துத் தரப்படும். மேலும் அவர்களின் குறைகளைப் போக்கும் வகையில் வாரியம் அமைக்கப்படும். இதன்மூலம் திருநங்கைகளுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும்.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஆண், பெண் ஆகியோருக்கு நிகராக திருநங்கைகளும் மதிக்கப்படுவர். அவர்களுக்கும் அனைத்து குடியுரிமை வசதிகளும் அளிக்கப்படும். ஏனெனில் இங்கு அனைவரும் சமம்.
ஆனால், இதனை சாதகமாகப் பயன்படுத்தி தவறான செயல்களில் ஈடுபட நினைத்தால் அடுத்த நொடியே அவர்கள் மீது காவல்துறை கடும் நடவடிக்கை மேற்கொள்ளும் என்றார்.
முன்னதாக, ஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகரான அமராவதியின் கட்டுமானத்தை பார்வையிட்டார் அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு.
அப்போது, திருநங்கைகளுக்கான அனைத்து உதவிகளையும் அரசு மேற்கொள்ளும் என்றார். அவர்களுக்கான ரேஷன் அட்டை, ரூ. 1,000 ஓய்வு ஊதியம் உள்ளிட்டவை வழங்க உத்தரவிட்டுள்ளார்.
சமநிலையை உருவாக்கும் முயற்சியில் அனைத்து அரசுத்துறைகளிலும் திருநங்கைகளுக்கான வேலைவாய்ப்பு உருவாக்க புதிய திட்டத்தை அமல்படுத்தப்போவதாக தெரிவிததுள்ளார்.