பெங்களூரு: ஆண்குழந்தை பிறக்க வேண்டும் என்ற வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டு, ஒன்றரை வயதுக் குழந்தையை பெற்றோரே நெருப்புப் படுக்கையில் படுக்க வைத்த, நெஞ்சைப் பதற வைக்கும் வினோத வேண்டுதல் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில் உள்ள அலப்பூர் என்னும் ஊரில் இஸ்லாமியர்களின் வழிபாட்டுத் தலமான தர்கா ஒன்று உள்ளது. இங்கு நேற்று தியாகத்தின் மாண்பினைச் சொல்லும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை கொண்டாடப்பட்டது. அப்பொழுது பலர் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றினர்.கரிக்கட்டிகள் எரிந்து உண்டான தணலில் நடப்பதும் அதில் ஒன்றாகும்.
ஆனால் நேற்று நடந்த நிகழ்ச்சியில் ஒன்றரை வயதுக் குழந்தையை அதன் பெற்றோரே நெருப்புப் படுக்கையில் படுக்க வைத்த, நெஞ்சைப் பதற வைக்கும் வினோத வேண்டுதல் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சியும் வெளியாகியுள்ளது.
அதில் வாழை இலைகளால் சுற்றப்பட்ட குழந்தை ஒன்றை ஒருவர் தணல் நிரம்பியுள்ள கரிப்படுக்கை ஒன்றில் வைக்கிறார். உடனே அந்த குழந்தை வீறிட்டு அழுவதும், அந்த வெப்பத்திலிருந்து தப்பிக்க முனைவதும் தெரிகிறது. அதே நேரம் அந்த தணல் கரிப்படுக்கையில் இருந்து புகை கிளம்பி வருவதும் தெரிகிறது.
தகவல் வெளியானதும் விசாரணை நடத்திய போலீசார் கூறியதாவது:
அந்த குழந்தையின் பெற்றோர்கள் இரண்டு வருடங்களுக்கு முன்னால் தங்களுக்கு ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என்று அந்த தர்காவில் பிரார்த்தனை செய்து கொண்டனர். பிரார்த்தித்த படியே அவர்களுக்கு ஆண் குழ்நதை பிறந்து விட்டது, எனவே வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டு, தர்காவுக்கு வந்துள்ளனர்.
அங்கு அவர்களின் குழந்தை தணல் கரிப்படுக்கையில் வைக்கப்பட்டுள்ளது. அணைந்து விட்ட கரி என்றாலும் சிறிதளவு வெப்பம் இருந்த காரணத்தால் குழந்தை வாழை இலையால் சுற்றப்பட்டு வைக்கப்பட்டது. இதுவும் சில நொடிகள் மட்டுமே நீடித்தது.
இது தொடர்பாக வழக்கு எதுவும் பதிவு செய்யப்படா விட்டாலும், குழ்நதையின் பெற்றோருக்கு மன நல ஆலோசனை வழங்கும் பொருட்டு, குழநதைகள் நல ஆணையத்திற்கு தகவல் அனுப்பபட்டுள்ளது.
இவ்வாறு காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
விடியோ: