புது தில்லி: சதாப்தி விரைவு ரயிலில் தனக்கு வழங்கப்பட்ட குளிர்பானத்தில் குப்பைகள் இருந்ததைப் பார்த்து கடும் அதிர்ச்சிக்குள்ளானார் முன்னாள் ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி.
திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான திரிவேதி, கத்கோடாம் - புது தில்லி இடையேயான சதாப்தி ரயிலில் கடந்த சனிக்கிழமை பயணம் செய்தார்.
அப்போது, அவருக்கு வழங்கப்பட்ட குளிர்பானத்தில் குப்பைக் கழிவுகள் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த திரிவேதி, இது குறித்து ரயில்வே கேன்டீன் ஊழியர்களிடம் புகார் அளித்தார்.
இது குறித்து அவர் கூறுகையில், எனக்கு வழங்கப்பட்ட எலுமிச்சை சாறை திறந்து பார்த்த போது அதில் தூசுகள் இருந்தன. ரயில் பயணிகளுக்கு இதுபோன்ற கெட்டுப்போன உணவுகளைக் கொடுப்பது சரியல்ல என்று திரிவேதி கூறினார்.
ரயில் கட்டணத்தை உயர்த்துவது குறித்து முடிவெடுத்ததால், ரயில்வே அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட திரிவேதி, பயணிகளுக்கு மிக மோசமான, தரமற்ற சேவை வழங்கப்படுவதாகவும், பயணிகளுக்கு வழங்கப்படும் சேவையை மேம்படுத்தவும், பாதுகாப்பை உறுதி செய்யவும் அதிக கவனம் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.