ஹைதராபாத்: வாடிக்கையாளருக்குத் தெரிவிக்காமல் சிம் கார்டை செயலிழக்க வைத்த பார்தி ஏர்டெல் நிறுவனத்துக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஹைதராபாத் அருகே பல்காம்பெட் நகரைச் சேர்ந்த ராகவேந்தர் ராவ், 2010ம் ஆண்டு முதல் ஏர்டெல் வாடிக்கையாளராக இருந்துள்ளார். இவரது சிம்கார்டு 2015ம் ஆண்டு செயலிழக்கம் செய்யப்பட்டது. இது குறித்து ஏர்டெல் நிறுவனத்துக்கு தகவல் தெரிவித்து ஒரு வாரத்தில் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்த நிலையில், அடுத்த 2 நாட்களிலேயே அது செயலிழக்கம் செய்யப்பட்டுள்ளது.
இதனால் தனக்கு ரூ.16 லட்சம் அளவுக்கு இழப்பு ஏற்பட்டதாகக் கூறி ஏர்டெல் நிறுவனத்தின் மீது ராகவேந்தர் ராவ் வழக்குத் தொடர்ந்தார்.
விசாரணையின் போது ஏர்டெல் நிறுவனம் சார்பில் கூறப்பட்டதாவது, எங்கள் தவறை திருத்திக் கொள்ள ராகவேந்தரை அணுகிய போது, தனக்கு 10 லட்சம் இழப்பீடும், ஒரு பேன்ஸி எண்ணும் தர வேண்டும் என்று நிபந்தனை விதித்ததாகக் கூறியது.
இரு தரப்பு நியாயங்களையும் கேட்ட ஹைதராபாத் நுகர்வோர் நல வாரியம், செல்போன் எண்ணை தவறாக செயலிழக்கம் செய்த ஏர்டெல் நிறுவனத்துக்கு ரூ.30 ஆயிரம் அபராதம் விதித்தது. தனக்கு 16 லட்சம் ரூபாய் இழப்பீடு ஏற்பட்டதற்கான ஆதாரத்தை ராகவேந்தர் அளிக்கத் தவறியதால் இழப்பீடுத் தொகை ரூ.30 ஆயிரமாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.