சண்டிகர்: தேரா சச்சா சௌதா தலைவர் குர்மீத் ராம் ரஹீமின் வளர்ப்பு மகளும், ஒரு மாத காலத்துக்கும் மேலாக தலைமறைவாக இருந்த ஹனிப்ரீத் முதல் முறையாக தனது மௌனத்தைக் கலைத்தார்.
செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பேட்டி அளித்திருந்த ஹனிப்ரீத், தனது தந்தை ஒரு அப்பாவி என்றும், அவர் பலாத்கார வழக்கில் தண்டனை பெற்றது என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கிவிட்டது என்றும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் பேட்டி வெளியான சில மணி நேரங்களில், ஹனிப்ரீத் மற்றும் அவருடன் இருந்த மற்றொரு பெண்ணையும் ஹரியாணா காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பஞ்சாப் மாநிலம் சிரக்புர் - பாட்டியாலா சாலையில் ஹனிப்ரீத்தை கைது செய்ததாக பஞ்குலா காவல்துறை ஆணையர் சாவ்லா தெரிவித்துள்ளார்.
குருமீத் ராம் ரஹீமுக்கு தண்டனை வழங்கப்பட்ட போது வன்முறை வெடித்த வழக்கில், பிரியங்கா தனேஜா என்கிற ஹனிப்ரீத், ஹரியாணா காவல்துறையினரால் தேடப்பட்டு வரும் 43 முக்கியக் குற்றவாளிகளில் முதல் நபராக சேர்க்கப்பட்டார்.
முன்னதாக ஆஜ் தக் என்ற ஹிந்தி தொலைக்காட்சியில் ஹனிப்ரீத் (36)கூறியிருந்ததாவது, காவல்துறையினர் என் மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை என்று தெரிவித்துள்ளார்.
மூடப்பட்ட காருக்குள் இருந்து பேட்டி அளித்திருந்த ஹனிப்ரீத், எங்கிருக்கிறார் என்பதை தொலைக்காட்சி தெரிவிக்கவில்லை.
என்னை ஒரு வில்லன் போலவும், மோசமானவளாகவும் காவல்துறை சித்தரிக்கிறது. காவல்துறை என்னை எப்படி ஒரு குற்றவாளியாக அறிவிக்கலாம்? நான் என்ன தப்பு செய்தேன்? என் தந்தையுடன் நான் இருந்தேன், ஒரு மகளாக என்ன செய்ய வேண்டுமோ அதை மட்டுமே செய்தேன். என் தந்தையுடன் இருந்தது குற்றமா? நான் மக்களுக்கு எதிராக எந்தக் குற்றமும் செய்யவில்லை என்றார்.
ரோஹ்தக்கில் இருந்து கிளம்பிய தாங்கள் எங்கு தங்கியிருந்தீர்கள் என்ற கேள்விக்கு, நான் டெல்லிக்குச் சென்றேன். தற்போது நான் பஞ்சாப் மற்றும் ஹரியாணா நீதிமன்றத்துக்கு செல்லப் போகிறேன். சட்டத்தின் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. எனது தந்தை ஒரு அப்பாவி என்றும் ஹனிப்ரீத் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.