மும்பை: மாநிலக் கல்வித்துறையின் உத்தரவுப்படி மஹாராஷ்டிர மாநிலத்த்தில் உள்ள ஆரம்ப மற்றும் மேனிலை பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் ஆதார் அட்டை தொடர்பான விபரங்களைத் தருவதற்கு, அப்பள்ளிகள் தயங்குவது ஏன் என்ற தகவல் வெளியாகியுள்ளது
மஹாராஷ்டிர மாநில அரசின் தகவல்களின் படி மாநிலம் முழுவதும் உள்ள ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஆரம்ப மற்றும் மேனிலை பள்ளிகளில் 1.80 கோடி மாணவர்கள் பயின்று வருகிறார்கள்.மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்பான தகவல்களை சேகரிக்கும் பொருட்டு, மாநிலக் கல்வித் துறையின் சார்பாக, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக 'சரல்' என்ற ஆன்லைன் மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் மாணவர்களின் எணிக்கை, அனுமதிக்கப்பட்ட ஆசிரியர்களின் எண்ணிக்கை. கூடுதலாக உள்ள ஆசிரியர்களின் எண்ணிக்கை மற்றும் காலியிடங்கள் உள்ளிட்ட எண்ணிக்கை விபரங்கள் வருடா வருடம் செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் அளிக்கப்பட வேண்டும்.
பொதுவாக ஒரு பள்ளியில் அங்கீகரிக்கப்பட்ட ஆசிரியர்களின் எண்ணிக்கை என்பது அங்குள்ள மாணவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தே அமையும். பெரும்பாலான பள்ளிகள் தங்கள் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களின் எண்ணிக்கையை கூட்டியே காண்பித்து வருகின்றன. இதன் காரணமாக அவர்களுக்கு அரசு அளிக்கும் நிதியை அவர்கள் முறைகேடாகப் பயன்படுத்தி வந்தனர்.
ஆனால் இந்த முறை சரல் மென்பொருள் மூலம் மாணவர்கள் விபரங்கள் சமர்ப்பிக்கப்படும் பொழுது மாணவர்களின் ஆதார் எண்ணும் சேர்த்து பதியப்பட வேண்டும் என்றும், அவ்வாறு பதியப்படாத மாணவர்கள் எண்ணிக்கையானது நிதி உதவி வழங்கும் பொழுது கணக்கில் கொள்ளப்படாது என்றும் கல்வித்துறை அறிவித்தது.
அரசு உத்தரவுப்படி மாணவர்களின் ஆதார் எண்களும் இணைக்கப்பட்டால் பள்ளிகளில் பயிலும் மாணவர்களது சரியான எணிக்கை தெரிய வரும். இதன் காரணமாக தங்கள் இதுவரை எண்ணிக்கையில் தவறான கணக்குக் காட்டி, ஆசிரியர்களின் எண்ணிக்கையில் மோசடி செய்து நிதி பெற்று வருவது அம்பலத்திற்கு வந்துவிடும் என்பதால் பெரும்பாலான பள்ளிகள் இவ்விஷயத்தில் தயக்கம் காட்டுகின்றன.
அதற்காக இந்த அறிவிப்பு செப்டம்பர் 28-ஆம் தேதி வெளியிடப்பட்டு, அக்டோபர் 5-ஆம் தேதி இறுதி நாள் என்று கூறப்பட்டுள்ளது குறைவான அவகாசம் என்று கோரி, அறிவிப்பை திரும்ப்பப்பெற வலியுறுத்தி வருகின்றன. இது தொடர்பாக பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கூட்டமைப்பின் செயலாளர் பிரசாந்த் ரெட்ஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
முதலில் இது ஒரு கல்வி சார்ந்த பணி இல்லை. அத்துடன் சரல் இணைய தளத்தில் நிறைய குறைபாடுகள் உள்ளது. பள்ளி பதிவேடுகளில் உள்ள தகவல்களும், மாணவர்களின் ஆதார் அட்டையில் உள்ள தகவல்களும் ஒத்துப் போகாவிட்டால் சரல் அந்த தகவலைப் பதிவு செய்யாது. அத்துடன் பெரும்பாலான பள்ளிகளில் தற்பொழுது பருவத் தேர்வு துவங்க உள்ளதால் ஆசிரியர்கள் பாடம நடத்துவதா இல்லை ஆதார் விபரங்களைப் பதிவு செய்வதா என்ற மன உளைச்சல்களுக்கு ஆளாகுவார்கள்
இவ்வாறு அவர் தெரிவித்தார்.