சுமார் 900 ஆண்டுகளுக்கும் மேலாக உயிர் வாழ்ந்ததாகக் கூறப்படும் தேவ்ராஹா பாபா பற்றிய தகவல்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
உத்திரப்பிரதேச மாநிலம் தியோரியா மாவட்டத்தில் வாழ்ந்த தேவ்ராஹா பாபா அல்லது தியோரகா பாபா என்று அழைக்கப்பட்ட இவர் 900 ஆண்டுகள் உயிர் வாழ்ந்ததாகக் கூறுகிறார்கள்.
வயதே இல்லாத யோகி என்று பிரபலமாக அறியப்படும் இவர், 1990ம் ஆண்டிலேயே தனக்கான சமாதியை கட்டியிருந்தார். மிகப்பெரிய தலைவர்களுக்கு எல்லாம் ஆசிர்வாதம் அளித்தாலும், மிக எளிமையான வாழ்வை மேற்கொண்டிருந்தாராம்.
இவர் மிகப்பெரிய நபர்களுக்கு எல்லாம் ஆசிர்வாதம் வழங்கியிருப்பதாகவும், பல விஷயங்களை முன் கூட்டியே கணித்துக் கூறியதாகவும் பலரும் புகழ் பாடி வந்தாலும், மற்றொரு புறம் இந்த தகவல்கள் அனைத்தும் பொய்யானவை என்றும், அவரிடம் ஏதோ ஒரு சக்தி இருந்தது மட்டும் உண்மை என்றும் சிலர் தெரிவித்திருப்பதும் கவனத்தில் கொள்ள வேண்டியதாகவே உள்ளது.
இந்திரா காந்தி, ராஜேந்திர பிரசாத், வாஜபேயி என பல முக்கியத் தலைவர்களையும் இவர் நேரில் சந்தித்துள்ளார். நேரில் பார்ப்பதற்கும் இவர் விநோதமாகவே இருந்துள்ளார்.
மேலும் இவரைப் பற்றி வியப்பளிக்கும் மற்றொரு தகவல் என்னவென்றால், இவர் யமுனை ஆற்றில் பிறந்தவர் என்றும், அதனாலேயே அவர் நீருக்குக் கீழே 30 நிமிடங்களுக்கும் மேலாகவே அமர்ந்திருக்கும் வல்லமை பெற்றிருந்ததாகவும் கூறுகிறார்கள்.
இவர் பிறந்தது எப்போது, எங்கே என பல புதிர்கள் இருப்பது போலவே, இவரது வயதும் கணக்கிட முடியாததாகவே உள்ளது. யோகினி ஏகாதசிக்கு தனது உயிரை அர்ப்பணித்துக் கொண்ட இவர் 900 ஆண்டுகளுக்கும் மேலாக உயிர் வாழ்ந்ததாக மக்கள் நம்புகிறார்கள்.
இவர் மக்களுக்குக் கூறிய முக்கிய அறிவுரை என்னவென்றால், "மகிழ்ச்சிதான் எல்லாவற்றையும் விட பெரிய சொத்து. உலகிலேயே விலை உயர்ந்த பொருள் மகிழ்ச்சி. காலந்தவறாமை மக்கள் கடைபிடிக்க வேண்டிய மிக முக்கியமான விஷயம்" என்பதுதான். அதோடு, யோகக் கலையைக் கைக்கொண்டிருந்த இவர், பிராணயாமமும் செய்து வந்துள்ளார்.