புதுதில்லி: ஆதார் எண் மூலம் 27 கோடி போலி குடும்ப அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டு நீக்கப்பட்டுள்ளதாக மத்திய சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துளார்.
தில்லியில் நடைபெற்ற இணைய பாதுகாப்பு குறித்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் கலந்துகொண்டு பேசுகையில், டிஜிட்டல் ஆளுமை என்பது ஆட்சியின் வடிவம். வங்கி கணக்களோடு ஆதார் எண்ணை இணைப்பது மூலம் சட்ட விரோதப் பணப்பரிவர்த்தனை செய்பவர்களையும் போலி வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்களையும் எளிதில் பிடிக்க முடியும் என தெரிவித்தார்.
மேலும், இதுவரை 60 லட்சம் வங்கிக் கணக்குகளில் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
ஆதார் மூலம் 3 கோடி போலி சமையல் எரிவாயு இணைப்புகளும் 27 கோடி போலி குடும்ப அட்டைகளும் கண்டுபிடிக்கப்பட்டு நீக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
நேரடி மானிய பரிமாற்ற திட்டத்தின் மூலம் 58 ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு மீதமாகி உள்ள தாகவும் தெரிவித்தார்.
மருத்துவமனை சிகிச்சைகள், அரசு அலுவலகங்களில் நில பத்திர பதிவுகள், விவசாய பயிர்களின் விலை விகிதங்கள் போன்ற சேவைகள் ஆன்லைனில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் பெரிய சந்தையாக உருவாகி வருகிறது என பிரசாத் கூறினார்.
நாட்டின் தொழில் நுட்பத்தை அதிகரிப்பதற்கு இணைய பாதுகாப்பு முக்கியம். வங்கி, மின்சாரம், நிதி ஆகிய துறைகளில் துறை சார்ந்த கணினி அவசர ஆலோசனை குழுவை அமைத்துள்ளோம். டிஜிட்டல் மோசடிகளில் 0.06 விழுக்காடு கண்டறியப்பட்டுள்ளது. இது நாட்டிற்கு சவாலாக உள்ளதாக ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.