தொலைபேசியில் மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று கர்ப்பிணிக்கு செவிலியர்கள் பிரசவம் பார்த்ததில், குழந்தை இறந்தே பிறந்த சம்பவம் ஒடிசாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் விஜய் நடித்த நண்பன் படத்தில் வருவதைப் போல ஒடிசாவில் உள்ள மருத்துவமனை செவிலியர்கள் முயன்றதில், அது படுதோல்வி அடைந்தது. நிழற்படம் நிஜமாகவில்லை.
ஒடிசா மாநிலம் கேந்த்ராபாடா மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில், நிறைமாத கர்ப்பிணியான ஆர்த்தி சமால் அனுமதிக்கப்பட்டார். அவருடன் கணவர் கல்பாத்ரு சமாலும் இருந்தார்.
ஆர்த்திக்கு சிகிச்சை அளித்து வந்த டாக்டர் ராஷ்மிகாந்த் பத்ரா, அன்றைய தினம் மருத்துவமனையில் இல்லாததால், அவரது உதவியோடு செவிலியர்கள் சிசேரியன் செய்ய முடிவெடுத்தனர். அதன்படி, அறுவை சிகிச்சை அறையில், மருத்துவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர் சொல்ல சொல்ல இவர்கள் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளனர். ஆனால், அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்படவில்லை. குழந்தை இறந்தே பிறந்துள்ளது. மேலும், ஆர்த்தியின் கருப்பையும் சேதமடைந்துவிட்டது.
தனது குழந்தையின் உடலோடு கேந்த்ராபாடா நகர காவல்நிலையத்துக்குச் சென்ற கல்பாத்ரு, மருத்துவருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்துள்ளார்.
இது குறித்து கல்பாத்ரு கூறுகையில், எனது மனைவியை மருத்துவமனையில் அனுமதித்ததும், மருத்துவரை தொடர்பு கொண்டு பேசினேன். தான் தற்போது மருத்துவமனையில் இல்லாவிட்டாலும், பூரண சிகிச்சை அளிப்பதாக உறுதி அளித்தார். ஆனால், என் முதல் குழந்தையை இழந்துவிட்டேன். எனது மனைவியின் கருப்பையும் சேதமடைந்துவிட்டது. இது குறித்து செவிலியர்களைக் கேட்டால், மருத்துவர் என்ன சொன்னாரோ அதை சரியாகச் செய்தோம் என்கிறார்கள். மருத்துவமனை நிர்வாகத்தின் கவனக்குறைவே இதற்குக் காரணம் என்று குற்றம்சாட்டுகிறார்.
நண்பன் படத்தில் மருத்துவர் வீடியோ கான்பரன்சிங்கில் கூறுவதைக் கேட்டு, படத்தின் நாயகன் விஜய் உள்ளிட்டோர் அதை சரியாகச் செய்து குழந்தையை பிரசவிக்கும் காட்சி திரையரங்கில் பலத்த கைத்தட்டலை பெற்றது. அதுபோன்று நிஜத்தில் செய்ய முயன்ற செவிலியர்களின் செயல், ஒரு குழந்தையின் உயிரையும், தாயின் கருப்பையையும் பலிவாங்கியுள்ளது.