புது தில்லி: தபால்நிலையத்தில் வைத்திருக்கும் கணக்குகளில் பணத்தை முதலீடு செய்யவும், வருங்கால வைப்பு நிதி, தேசிய சேமிப்பு பத்திரம், கிசான் விகாஸ் பத்திரம் போன்றவற்றுக்கும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இவற்றில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், தங்களது கணக்குகளுடன் ஆதார் எண்ணை இணைக்க 2017ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி வரை காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மத்திய நிதித்துறை அமைச்சகம், தபால்துறை, வருங்கால வைப்பு நிதி, தேசிய சேமிப்புப் பத்திரம், கிசான் விகாஸ் பத்திரம் ஆகியவற்றுக்கு என தனித்தனியாக 4 அரசாணைகளை பிறப்பித்துள்ளது.
ஒருவேளை ஆதார் எண் இல்லாத வாடிக்கையாளர்கள், தங்களது ஆதார் எண் கோரி விண்ணப்பித்த விண்ணப்ப எண்ணை பதிவு செய்யலாம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே வங்கிக் கணக்கு முதல் செல்போன் வரை ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளதை அடுத்து தற்போது மத்திய அரசின் மேலும் 4 சேவைகளுக்கும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.