உயர் கல்வி கற்க மாற்றுத் திறனாளி மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக, அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் கல்வி நிறுவனங்களில் அவர்களுக்கு கல்விக் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்க ஒடிஸா அரசு முடிவு செய்திருக்கிறது.
அரசின் இந்த முடிவை உடனடியாக அமல்படுத்துமாறு அனைத்து உயர் கல்வி நிறுவனங்களுக்கும் உயர் கல்வித் துறைச் செயலர் கடிதம் எழுதியிருப்பதாக உயர் கல்வித்துறை அமைச்சர் ஆனந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
கண் பார்வையற்ற, செவித் திறன் இழந்த, பேச இயலாத, ஊனமுற்ற மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு கல்வி, தேர்வு, சான்றிதழ் கட்டணங்களில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். அப்படி அவர்கள் கட்டணத்தை ஏற்கெனவே செலுத்தியிருந்தால், அத் தொகை அவர்களுக்குத் திரும்பத் தரப்படும் என்று அவர் தெரிவித்தார்.