கோமா, நினைவிழத்தல் என பல அதிர்ச்சிகளைத் தாண்டி மீண்ட உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த இளம்பெண், தனது கணவர்தான் தன்னை தாக்கி கோமா நிலைக்குத் தள்ளியதாக வாக்குமூலம் அளித்தார்.
ஒரு நாவலைப் படித்தால் கூட இந்த அளவுக்கு த்ரில்லர் இருக்குமா என்பதை உறுதியாகக் கூறிவிட முடியாது. ஆனால், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த மாதுரியின் வார்க்கையில் அத்துனை திகிலூட்டும் திருப்பங்கள்.
உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த கன்னௌஜ் பகுதியைச் சேர்ந்தவர் மாதுரி. கோமாவில் இருந்து மீண்டு, நினைவிழந்திருந்த நிலையில், அவருக்கு திடீரென நினைவு திரும்பியது.
அப்போதுதான் அவர், தனது கணவர், கடந்த ஜூன் 13ம் தேதி தன்னை மிகக் கொடூரமாகத் தாக்கிக் கொலை செய்ய முயன்ற விஷயம் தெரிய வந்தது.
23 வயதாகும் மாதுரி, ஒரு கட்டடப் பணி நடக்கும் இடத்தில் இருந்து மயக்க நிலையில் மீட்கப்பட்டார். பாத்ரா மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருந்தார். அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால், 2 மாத காலமாக அவர் கோமாவில் இருந்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் அவர் கோமாவில் இருந்து மீண்டார். ஆனால், தான் யார் என்பதோ, தனக்கு என்ன நேர்ந்தது என்பதோ அவருக்கு நினைவில் இல்லை.
நினைவிழந்த நிலையில் இருந்த மாதுரிக்கு 2 மாதங்களுக்குப் பிறகு திடீரென நினைவு திரும்பியது. அப்போதுதான், அவர் தனக்கு நேர்ந்த மிகக் கொடூரமான சம்பவம் பற்றி விளக்கினார்.
ரவியின் பெற்றோர் வற்புறுத்தி என்னை அவருக்கு திருமணம் செய்து வைத்தனர். திருமணமான இரண்டாவது நாள், தனது கணவர் ரவி சிங் என்கிற டிங்கு, தனக்கு வேலை வாங்கித் தருவதாக தில்லிக்குக் கூட்டிச் சென்றார்.
அங்கு ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு கட்டடப் பகுதிக்குச் சென்றதும், அங்கிருந்த இரும்புக் கம்பியால் தன்னைத் தாக்கினார். அப்போது தான் மயங்கி விழுந்து விட்டதாகவும் கூறினார்.
இதையடுத்து, முசாபர்நகரில் இருந்த ரவியை காவல்துறையினர் கைது செய்தனர். விசாரணையில், தனக்கு மற்றொரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததால், இவளைக் கொன்றுவிட்டு அவளுடன் வாழவே இவ்வாறு செய்தாக குற்றத்தை ஒப்புக் கொண்டார்.