கர்வா சௌத் நாளில் செல்லிடப்பேசி அழைப்புக்கு கணவர் பதில் அளிக்காததால் விரக்தியில் மனைவி தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து தில்லி காவல் துறையினர் கூறியதாவது:
தில்லியைச் சேர்ந்த 37 வயது பெண் ஒருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை கர்வா சௌத் நாளில் விரதம் இருந்தார். கணவர் நலனுக்காக சிறப்பு பூஜையும் செய்தார்.
பின்னர், அமெரிக்காவில் வசிக்கும் தனது கணவரை செல்லிடப்பேசியில் தொடர்பு கொண்டு பேச முயன்றார். அவரது அழைப்புக்கு கணவர் பதில் அளிக்கவில்லை. இதனால், விரக்தி அடைந்த அவர் சம்பவத்தன்று வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
இது தொடர்பாக அவரது குடும்பத்தினர் போலீஸில் புகார் அளித்தனர். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இருவக்கும் திருமணம் நடைபெற்றது.
திருமணமாகி 15 நாளில் கணவர் அமெரிக்கா சென்றார். அதன் பிறகு அவர் நாடு திரும்பவில்லை. இந்நிலையில், கர்வா சௌத் நாளில் ஆசையுடன் கணவருக்கு செல்லிடப்பேசியில் மனைவி தொடர்பு கொண்டு பேச முயன்றார்.
ஆனால், அவர் பதில் அளிக்காததால் விரக்தியில் மனைவி தற்கொலை செய்துகொண்டது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.