மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் பிறந்ந நாளான அக்டோபர் 15-ஆம் தேதி தில்லியில் தூய்மை - பசுமை ஓட்டத்தை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு தொடங்கி வைக்கிறார்.
இது தொடர்பாக டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் இண்டர்நேஷனல் பவுண்டேஷனின் ஆலோசகரும், கலாமின் முன்னாள் உதவியாளருமான ஏ.எம். கான் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அப்துல் கலாமின் 86-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ராமேசுவரம், சென்னை, தில்லி உள்ளிட்ட இடங்களில் பள்ளி, கல்லூரிகளில் கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி முதல் அக்டோபர் 15-ஆம் தேதி வரை 86 நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்று வருகின்றன. இந்த நிகழ்ச்சிகளில் கலாமின் லட்சியங்களை மாணவர்கள் மத்தியில் பிரசாரம் செய்து வருகிறோம்.
குடியரசுத் தலைவர்: அப்துல் கலாமின் பிறந்த நாளையொட்டி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலாம் குடும்பத்தாரையும், ஒடிஸாவைச் சேர்ந்த 50 பழங்குடியின மாணவர்களையும் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் சந்தித்து உரையாட உள்ளார்.
இதேபோல, பிரதமர் நரேந்திர மோடியால் கடந்த ஜூலை 27-ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட்ட "கலாம் சந்தேஷ் வாகிணி - விஷன் 2020' பிரசாரப் பேருந்து 16 மாநிலங்களில் பயணம் செய்து வருகிறது.
அப்துல் கலாம் பிறந்த நாளன்று (அக்டோபர் 15) தில்லிக்கு வந்தடையும் இந்தப் பேருந்தையும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வரவேற்பார்.
தூய்மை, பசுமை ஒட்டம்: மேலும், அப்துல் கலாமின் லட்சியங்களில் ஒன்றான "தூய்மை பசுமை இந்தியா' என்பதை வலியுறுத்தும் வகையில் தூய்மை-பசுமை ஓட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஓட்டத்தை இந்தியா கேட்டில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு தொடங்கி வைக்க உள்ளார் என்றார் அவர்.