ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவரும், சுமை தூக்கும் தொழிலாளி ஒருவரும் உயிரிழந்தனர்.
இதுகுறித்து பாதுகாப்புப் படை செய்தித்தொடர்பாளர் கூறியதாவது:
பூஞ்ச் மாவட்டத்தில் சர்வதேச எல்லையையொட்டிய கிருஷ்ணாகாடி பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் வியாழக்கிழமை அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்தினர். திடீரென நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவரும், சுமை தூக்கும் தொழிலாளி ஒருவரும் உயிரிழந்தனர். நமது ராணுவ வீரர்கள் அவர்களுக்கு உரிய பதிலடி
கொடுத்தனர் என்று அந்தச் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.
முன்னதாக, இதே பூஞ்ச் மாவட்டத்தில் கடந்த 4-ஆம் தேதி பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் காயமடைந்தனர். கடந்த 3-ஆம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலில் ராணுவ வீரர், 2 சிறார்கள் உயிரிழந்தனர். 12 பேர் காயமடைந்தனர். போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவத்தினர்
எல்லைப் பகுதிகளில் நடத்திவரும் தாக்குதல்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.