கேரளத்தில் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவினருக்கு எதிராக அரங்கேற்றப்படும் கொலைவெறித் தாக்குதல்களைக் கண்டித்து அந்த மாநிலத்தில் நவம்பர் 11-ஆம் தேதி பேரணி நடத்தப் போவதாக அகில பாரதிய வித்யார்தி பரீஷத் (ஏபிவிபி) அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக ஆர்எஸ்எஸ் மாணவர் அமைப்பான ஏபிவிபி-யின் தலைவர் வினய் பித்ரே, தில்லியில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசின் ஆட்சிக் காலத்தில் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவைச் சேர்ந்தவர்கள் குறிவைத்து தாக்கப்படுகின்றனர். இதுவரை பாஜகவைச் சேர்ந்த 120 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கு மாநிலத்தை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசுக்கும் முக்கிய பங்கு உள்ளது.
இத்தகைய வன்முறைத் தாக்குதல்களுக்கு எதிராக அடுத்த மாதம் திருவனந்தபுரத்தில் கண்டனப் பேரணியை நடத்த ஏபிவிபி திட்டமிட்டுள்ளது. ஏறத்தாழ 50,000 பேர் இந்தப் பேரணியில் பங்கேற்க உள்ளனர். பெருந்திரளாக வந்து இந்தக் கண்டனப் பேரணியில் கலந்து கொள்ளுமாறு நாடு முழுவதிலும் உள்ள ஏபிவிபி அமைப்பினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
கேரளத்தில் ஹிந்துத்துவ இயக்கங்களுக்கு எதிராக நடைபெறும் தாக்குதல்களைக் கண்டித்து நாடு தழுவிய பாத யாத்ரையை பாஜக தலைவர் அமித் ஷா அண்மையில் தொடங்கி வைத்தது நினைவுகூரத்தக்கது.