பரிதாபாத்: ஹரியாணா மாநிலத்தின் பரிதாபாத்தில் மாட்டிறைச்சி கடத்தியதாக எழுந்த சந்தேகத்தின் பேரில் மாற்றுத் திறனாளி ஒருவரை உயிருடன் எரிக்க முயன்ற கொடூரம் நிகழ்ந்துள்ளது
வட மாநிலங்களில் தொடர்ச்சியாக பசு வதை கண்காணிப்பாளர்கள் என்ற பெயரில் மாட்டிறைச்சி பயன்படுத்துவோருக்கு எதிரான தாக்குதல் போக்கு அதிகரித்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பரிதாபாத்தில் மாற்றுத்திறனாளியான இஸ்லாமிய வாலிபரான ஆசாத் என்பவர் வாடகைக்கு ரிக்ஷா ஓட்டி வாழ்ந்து வருகிறார். அங்குள்ள இறைச்சி கடைக்காரர் ஒருவரிடம் ஆசாத் வாடகைக்கு ரிக்ஷா ஓட்டுவது வழக்கம்.
நேற்று இவர் தனது வாடிக்கைப்படி ரிக்ஷா ஓட்டிச் சென்ற போது 2 பேர் வழி மறித்துள்ளனர். நீ மாட்டிறைச்சி கடத்துகிறாயா என்று கேட்டு அவரிடம் தகராறு செய்துள்ளார். அதற்கு காவல் நிலையம் சென்று சோதனையிடலாம் வாருங்கள் என்று ஆசாத் கூறியுள்ளார்.
ஆனால் இதனை ஏற்க மறுத்த அவர்கள் இருவரும் தங்கள் செல்போனில் பேசி மேலும் சிலரை வரவழைத்தனர். பின்னர் அந்த கும்பல் சேர்ந்து வாலிபர் ஆசாத்தை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் மயக்கம் அடைந்து கீழே விழுந்த ஆசாத் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீவைக்க அவர்கள் முயன்றுள்ளனர்.
ஆனால் தீக்குச்சியை அவர்கள் உரசிய போது ரோந்து போலீஸ்காரர் ஒருவர் அந்த பக்கமாக வந்துள்ளார். அவரைக் கண்டவுடன் தாக்கியவர்கள் தப்பித்து ஓடி விடவே, ஆசாத் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். ஆசாத் தற்பொழுது சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப் பதிவு செய்து தப்பி ஓடியவர்களைத் தேடி வருகின்றனர்.