தஸ்னா (உ.பி) ஆருஷி-ஹேமராஜ் இரட்டை கொலை வழக்கில் சிறையில் இருந்த பொழுது பார்த்த மருத்துவப் பணிக்கு பணம் எதுவும் வேண்டாம் என்று ராஜேஷ் தல்வார், நுபுர் தல்வார் தம்பதியர் மறுத்துள்ள விவகாரம் தெரிய வந்துள்ளது.
பல் மருத்துவ தம்பதியரான ராஜேஷ் - நுபுர் தல்வாரின் ஓரே மகள் ஆருஷி. தில்லிக்கு அருகே உள்ள நொய்டாவில் உள்ள இந்த தம்பதியினரின் இல்லத்தில், 16.05.2008 அன்று ஆருஷியும், அதற்கு மறுநாள் காலை அவர்களது வீட்டு வேலையாள் ஹேமராஜும் சடலங்களாக மீட்கப்பட்டனர். இந்த இரட்டைக்கொலை வழக்கினை சிபிஐ விசாரித்தது.
இது தொடர்பாக நடைபெற்ற விசாரணையின் முடிவில் விசாரணை நீதிமன்றம் தம்பதியர் இருவரையும் குற்றவாளிகள் என தண்டனை அளித்தது. பின்னர் இருவரும் 2013-ஆம் ஆண்டு உத்தரபிரதேசத்தின் தஸ்னா சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த தீர்ப்பினை எதிர்த்து அவர்கள் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இதன் மீது நடைபெற்ற விசாரணையில், அக்டோபர் 12-ஆம் தேதி போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் ராஜேஷ் - நுபுர் தல்வார் தம்பதியர் விடுதலை செய்யயப்பட்டனர்.
இந்நிலையில் அடிப்படையில் மருத்துவர்களான அவர்களை இருவரும் தங்கள் சிறையில் இருந்த பொழுதும் அங்குள்ள மற்ற சிறைக்கைதிகளுக்கு மருத்துவம் செய்து வந்துள்ளனர்.தற்பொழுது அவர்கள் விடுதலை ஆகப் போவதால் அவர்களிடம் சிகிச்சை எடுத்துக் கொண்டிருப்போர், விரைவில் அதனை முடித்துக் கொள்ள ஆர்வம் காட்டுகின்றனர்.
இது தொடர்பாக தஸ்னா சிறை மருத்துவரான தியாகி கூறும் பொழுது தாங்கள் விடுதலை ஆனாலும் 15 நாட்களுக்கு ஒரு முறை சிறைக்கு வருகை தந்து கைதிகளுக்கு மருத்துவம் பார்க்கிறோம் என்று அவர்கள் தெரிவித்துள்ளதாகக் கூறினார்.
அத்துடன் மிக முக்கியமாக சிறை கண்காணிப்பாளரான தாதிராம் மௌரியா கூறும் பொழுது, தல்வார் தம்பதியர் சிறையில் மருத்துவப் பணி புருந்ததற்காக அரசாங்கத்திடம் இருந்து நியாயமாகப் பெற வேண்டிய ஊதியத் தொகையான ரூ.49,500-ஐக் கூட வேண்டாம் என்று மறுத்து விட்டதாகக் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.