லக்னௌ: உத்தரப்பிரதேசத்தில் அரசுப் பேருந்து ஒன்றில் டிக்கெட் வழங்கும் மிஷின் வெடித்து நடத்துநர் படுகாயம் அடைந்த வினோத சம்பவம் நடந்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் மதுரவில்தான் இன்று காலை இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்குள்ள உத்தரப்பிரதேச மாநில அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்து ஒன்றில் நடத்துநராகப் பணிபுரிந்து வருபவர் நேத்ரா பால். வழக்கம் போல இன்று காலை பேருந்தில் பயணிகளுக்கு அவர் டிக்கெட் வழங்கிக் கொண்டிருந்தார். அப்பொழுது எதிர்பாராதவிதமாக அவர் கையில் இருந்த டிக்கெட் வழங்கும் எலெட்ரானிக் மிஷின் திடிரென்று வெடித்து சிதறியது.
அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆனால் நடத்துநர் நேத்ரா பாலுக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டது. அத்துடன் அந்த மெஷினும் முழுமையாக சேதமடைந்து விட்டது. விபத்துக்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை.
குறிப்பிட்ட வகை டிக்கெட் வழங்கும் மிஷினை தயாரித்து வழங்கிய நிறுவனத்திடம் உரிய விசாரணை நடத்துமாறு போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.