கவுஹாத்தி: பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்துக்கு எதிராக சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் கருத்து தெரிவித்த சி.ஆர்.பி.எப் வீரர் இன்று கைது செய்யப்பட்டார்.
பிகாரைச் சேர்ந்தவர் பங்கஜ் மிஸ்ரா. இவர் மத்திய பாதுகாப்பு படை பிரிவான சி.ஆர்.பி.எப்பில் பணிபுரிந்து வந்தார். மேற்கு வங்கத்தின் துர்காப்பூர் முகாமில் இவர் பணியாற்றி வந்த பொழுது சட்டீஸ்கர் மாநிலத்தில் நடந்த மாவோயிஸ்ட்டுகள் தாக்குதலில் 25 சி.ஆர்.பி.எப் வீரர்கள் கொல்லப்பட்டனர். அதில் இவரது உறவினரான அபய் குமார் என்பவரும் ஒருவர்.
அதனைத் தொடர்ந்து பங்கஜ்குமார் எழுதியிருந்த ஒரு பேஸ்புக் பதிவில் சூழ்நிலையினை சரியாக கையாளவில்லை என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் தைரியம் மிக்க அரசியல் தலைமை இல்லை என்று பிரதமர் மோடி ஆகிய இருவரையும் கடுமையாக விமர்சித்து இருந்தார்.
அவரது பதிவு பேஸ்புக்கில் வைரலாகப் பரவியதனைத் தொடர்ந்து அவர் உடனடியாக அஸ்ஸாம் மாநிலம் ஜோர்ஹாட்டுக்கு இடம் மாற்றப்பட்டார். இந்நிலையில் அவர் தற்பொழுது மீண்டும் ஒரு பேஸ்புக் விடியோ பதிவினை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் தான் ஜோர்ஹாட் முகாமில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ளதாகவும், சி.ஆர்.பி.எப் வீரர்களின் நலன் சார்ந்த தன்னுடைய கோரிக்கைகள் பரிசீலிக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார். மேலும் வீரர்களை மேலதிகாரிகள் தங்கள் சொந்த வேலைகளுக்கு பயன்படுத்துவதாகவும் புகார் கூறினார். இதன் காரணமாக அவர் தற்பொழுது உண்ணாவிரதம் துவங்கியுள்ளதாகவும் தெரிவித்தார். இந்த விடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவியது.
இதன் தொடர்ச்சியாக பங்கஜ் மீது பட்டாலியன் கமாண்டர் பெஹ்ரா போஸில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து ஜோர்கட் காவல்துறையினர் அவரை ரௌரியா சி.ஆர்.பி.எப் முகாமில் கைது செய்தனர். அவர் மீது தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பல பிரிவுகளின் கீழ் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பங்கஜ் தற்பொழுது நீதிமன்ற காவலில் உள்ளதாக ஜோர்ஹாட் காவல்துறை கண்காணிப்பாளர் புயன் தெரிவித்தார்.