காஷ்மீர்: மருத்துவமனையில் உள்ள குளீரூட்டப்பட்ட குடிநீர் வழங்கும் எந்திரத்தில் பிடிக்கப்பட்ட நீரில் குட்டிப் பாம்பு ஒன்று மிதந்த சம்பவம், அனைவரையும் அதிர்ச்சியில் உறையச் செய்துள்ளது
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் உதம்பூர் மாவட்ட தலைமை மருத்துவமையில்தான் இந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. உடல்நலக் குறைபாடு காரணமாக இங்கு உள்நோயாளியாக இளைஞர் ஒருவர் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவருடன் அவரது தந்தை துணைக்கு இருந்துள்ளார்
சம்பவத்தன்று தனது மகனுக்கு குடிநீர் அளிக்க வேண்டி, மருத்துவமனை வளாகத்தில் உள்ள குளீரூட்டப்பட்ட குடிநீர் வழங்கும் எந்திரத்தில் நீர் பிடிக்க பாட்டிலுடன் சென்றுள்ளார். அங்கு சென்று நீர் பிடித்து திரும்பிய அவர் அதனை அவரது மகனுக்கு கொடுப்பதற்காக அவரது வாயில் வைத்துள்ளார். அப்பொழுது பாட்டிலின் அடிப்பாகத்தில் குட்டிப் பாம்பு ஒன்று மிதந்ததைக் கண்ட அவர் அதிர்ச்சியில் உறைந்துள்ளார்.உடனடியாக இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'இது மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியத்ததின் உச்சம் என்றும், உடல்நலத்துடன் நன்றாக இருக்கும் ஒருவர் கூட மருத்துவமனை நீரைக் குடித்தால் இறந்து விட வேண்டியதுதான்' என்றும் ஆத்திரத்துடன் தெரிவித்தார்.
இந்த அதிர்ச்சி சம்பவம் தொடர்பாக விளக்கமளித்த மாவட்ட மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் விஜய், 'குறிப்பிட்ட குளிரூட்டும் இயந்திரத்துடன் இணைக்கப்பட்டுள்ள நிலத்தடி நீர் குழாய்களின் வழியாக அந்த பாம்பு வந்திருக்க வாய்ப்பு உண்டு என்று தெரிவித்தார். அத்துடன் இத்தகைய குழாய்களை ஆய்வு செய்ய மருத்துவமனை சுகாதாரப் பிரிவு ஊழியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாவும் தெரிவித்தார்.