பாஜக தலைவர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா ஒரு செய்தி இணைய தளத்துக்கு எதிராகத் தொடர்ந்து அவதூறு வழக்கில் அவருக்கு மத்திய அரசு சார்பில் சட்ட உதவி வழங்கப்பட்டுள்ளதைக் கண்டித்து காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் "ஒய் திஸ் கொல வெறி டா?' என்ற கேள்வியுடன் விமர்சித்துள்ளார்.
மத்தியில் பாஜக தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைத்த பிறகு, அமித் ஷாவின் மகனன் ஜெய் ஷாவுக்குச் சொந்தமான நிறுவனத்தின் வருமானம் பல மடங்கு அதிகரித்துள்ளதாக தனியார் செய்தி இணையதளத்தில் கட்டுரை வெளியானது. இந்தக் கட்டுரையில் வெளியான தகவல்களுக்கு அமித் ஷாவும் பாஜகவினரும் மறுப்பு வெளியிட்டனர். அதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட செய்தி இணையதளத்தின் ஆசிரியர், அந்த நிறுவனம், கட்டுரையை எழுதிய செய்தியாளர் ஆகியோர் மீது குஜராத்தின் ஆமதாபாத் பெருநகர நீதிமன்றத்தில் ஜெய் ஷா அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் ஜெய் ஷா சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிடுவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது.
இதற்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டர் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் "அமித் ஷாவின் மகனுக்கு அரசு சார்பில் சட்ட உதவியா? ஒய் திஸ் கொல வெறிடா?' என்று விமர்சித்துள்ளார்.