உள்நாட்டில் வேலை தேடுவது அதிகரிப்பு
நன்கு படித்த இந்திய இளைஞர்கள், வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்வதைக் கைவிட்டு, உள்நாட்டிலேயே நல்ல வேலை தேடுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். சர்வதேச வேலைவாய்ப்பு இணையதளமான 'இன்டீட்' நடத்திய ஆய்வில் இத்தகவல் தெரிய வந்துள்ளது.
இந்தியாவில் தலைசிறந்த உயர்கல்வி நிலையங்களில் படிப்பை முடிப்பவர்கள், பன்னாட்டு நிறுவனங்களில் பணியாற்றி வருபவர்கள் உள்பட பலர் வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்வதையே இலக்காகக் கொண்டுள்ளனர். பெரும்பாலான வெளிநாட்டு நிறுவனங்கள், தங்கள் துறையில் சிறந்து விளங்கும் இந்திய இளைஞர்களை முன்னுரிமை கொடுத்து பணியில் சேர்த்துக் கொள்கின்றன. இந்திய இளைஞர்களின் பணித் திறனே இதற்கு முக்கியக் காரணம்.
ஆனால், கடந்த ஆண்டில் இருந்து இந்திய இளைஞர்களின் வெளிநாட்டு மோகம் குறைந்து வருகிறது. அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் அரசின் முடிவுகளில் ஸ்திரத்தன்மை இல்லாததுதான் இதற்கு முக்கியக் காரணமாகும்.