கேரளத்தில் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக பிரமுகர்கள் படுகொலை செய்யப்படுவது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதிலளிக்குமாறு அந்த மாநில அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி அரசின் ஆட்சிக் காலத்தில் ஹிந்துத்துவ அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தாக்கப்படுவதாகவும், கொல்லப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதனிடையே, இதுதொடர்பாக கேரள உயர் நீதிமன்றத்தில் தனியார் அமைப்பு ஒன்று சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது:
பினராயி விஜயன் அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற ஓராண்டுக்குள் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவைச் சேர்ந்த 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தில் ஆளும் கட்சியினருக்குத் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் வலுவாக உள்ளன. முதல்வரின் தொகுதியைச் சேர்ந்த ஆளுங்கட்சியினருக்கும் இந்தக் கொலைகளில் தொடர்பு உள்ளது.
இதுதொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அந்த மனு, தலைமை நீதிபதி நவநிதி பிரசாத் சிங், நீதிபதி ராஜா விஜயராகவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அதனை பரிசீலித்த நீதிபதிகள், வரும் 25-ஆம் தேதிக்குள் பதில் மனுவைத் தாக்கல் செய்யுமாறு மாநில அரசுக்கு உத்தரவிட்டனர்.
சிபிஐ விசாரணை தொடர்பாக அரசு கொண்டுள்ள நிலைப்பாட்டையும் அதில் குறிப்பிடுமாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.