வட இந்தியாவில் தீபாவளி பண்டிகை வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அந்தமானில் கடற்படை வீரர்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடினார்.
பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இரண்டு நாள் பயணமாக அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளுக்கு சென்றார். அங்கு அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளின் லெஃப்டினண்ட் கவர்னரான முன்னாள் கடற்படை தளபதி டி.கே.ஜோஷி மற்றும் கடற்படைத் துணைத் தளபதி பிமல் வர்மா ஆகியோர் வரவேற்பு அளித்தனர்.
இதையடுத்து அந்தமானில் செயல்பட்டு வரும் கப்பற்படை தளவாடத்தைப் பார்வையிட்டார். பின்னர் அங்கு 2004-ம் ஆண்டு சுனாமியால் உயிரிழந்தர்கள் நினைவகத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்தினார்.
இந்நிலையில், அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளில் உள்ள போர்ட் பிளேய்ர் கடற்படைத் தளவாடத்தில் உள்ள கடற்படை வீரர்கள், கடலோரக் காவல்படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடினார்.