இந்திய விமானப் படையின் 20 விமானங்கள் விமான ஓடுதளங்களுக்குப் பதில் நெடுஞ்சாலைகளில் தரையிறக்கப்படவிருக்கின்றன.
லக்னெள - ஆக்ரா தேசிய விரைவு நெடுஞ்சாலையில் இந்த மாதம் 24-ஆம் தேதி நடைபெறவிருக்கும் இந்த ஒத்திகையில், நாட்டிலேயே முதல் முறையாக போக்குவரத்து விமானம் ஈடுபடுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து முப்படைகளின் மத்தியத் தலைமையகச் செய்தித் தொடர்பாளர் கார்கி மலிக் சின்ஹா கூறியதாவது:
விமானப் படைக்குச் சொந்தமான மிராஜ் 2000, ஜாகுவார், சுகோய் 30 எம்கேஐ ஆகிய போர் விமானங்களும், ஏஎன்-32 போக்குவரத்து விமானமும் உத்தரப் பிரதேசத்தின் உன்னாவ் மாவட்டம், பாங்கர்மெள பகுதி வழியாகச் செல்லும் லக்னெள - ஆக்ரா தேசிய விரைவு நெடுஞ்சாலையில் தரையிறக்கும் பயிற்சியில் ஈடுபடுத்தப்படவுள்ளன.
நாட்டிலேயே முதல் முறையாக ஒரு போக்குவரத்து விமானம் நெடுஞ்சாலையில் தரையிறக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
ஏஎன்-32 போக்குவரத்து விமானங்கள் ராணுவப் பயன்பாட்டுக்கு மட்டுமன்றி, வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்களின்போது மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்கும் பயன்படக் கூடியவை ஆகும்.
பேரிடர்ப் பகுதிகளுக்கு மிக அதிக அளவில் நிவாரணப் பணிகளைக் கொண்டு வரவும், மிக அதிக எண்ணிக்கையிலானவர்களை மீட்கவும் அந்த விமானங்கள் பயன்படும். விமானங்களை நெடுஞ்சாலைகளில் இறக்கி, பிறகு புறப்படச் செய்யும் இந்த ஒத்திகை நிகழ்ச்சி வரும் 24-ஆம் தேதி நடத்தப்படவிருக்கிறது.
எனினும், அந்தச் சாலைப் பகுதியில் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, நிகழ்ச்சிக்கு நான்கு நாள்களுக்கு முன்னரே அந்தப் பகுதியில் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்படும் என்றார் அவர்.