காற்று, நீர் மாசுகளுக்கு 25 லட்சம் பேர் பலி: ஆய்வில் தகவல்

இந்தியாவில் காற்று, நீர் உள்ளிட்டவற்றில் ஏற்பட்ட மாசுகளினால் கடந்த 2015-ஆம் ஆண்டில் 25 லட்சம் பேர் உயிரிழந்திருப்பதாக ஆய்வுத் தகவல் ஒன்று தெரிவிக்கிறது.
தில்லியில் இந்தியா கேட் பகுதியை மறைக்கும் அளவுக்கு ராஜபாதை சாலையில் சூழ்ந்து காணப்படும் பனிப்புகைமாசு. நாள்: வெள்ளிக்கிழமை
தில்லியில் இந்தியா கேட் பகுதியை மறைக்கும் அளவுக்கு ராஜபாதை சாலையில் சூழ்ந்து காணப்படும் பனிப்புகைமாசு. நாள்: வெள்ளிக்கிழமை

இந்தியாவில் காற்று, நீர் உள்ளிட்டவற்றில் ஏற்பட்ட மாசுகளினால் கடந்த 2015-ஆம் ஆண்டில் 25 லட்சம் பேர் உயிரிழந்திருப்பதாக ஆய்வுத் தகவல் ஒன்று தெரிவிக்கிறது.

தில்லி ஐஐடி நிறுவனம், அமெரிக்காவின் ஐஹான் மருத்துவ நிறுவனம் ஆகியவற்றைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், உலக நாடுகளில் நிலவும் மாசு குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வு முடிவு, பத்திரிகை ஒன்றில் வெளியாகியுள்ளது. அதில், உலகிலேயே இந்தியாவில்தான் காற்று, நீர் மாசுகள் மற்றும் பிற மாசுக்களுக்கு கடந்த 2015-ஆம் ஆண்டில் அதிக அளவு உயிரிழப்புகள் நேரிட்டிருக்கும் தகவல் இடம்பெற்றுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
பல்வேறு மாசுகளினால், உலகம் முழுவதும் கடந்த 2015-ஆம் ஆண்டில் 65 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். நீர் மாசுக்கு மட்டும் 18 லட்சம் பேர் இறந்துள்ளனர். பணிபுரியும் இடத்தில் நிலவும் மாசு காரணமாக, 8 லட்சம் பேர் பலியாகியுள்ளனர்.
உலகில் மாசு காரணமாக நேரிட்டுள்ள உயிரிழப்புகளில், 92 சதவீதம் மிகவும் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில்தான் நேரிட்டுள்ளன. வேகமாக தொழில்மயமாகி வரும் இந்தியா, பாகிஸ்தான், சீனா, வங்கதேசம், மடகாஸ்கர், கென்யா போன்ற நாடுகளில், உலகில் 4-இல் ஒரு பங்கு உயிரிழப்புகள் மாசு காரணமாக நேரிட்டுள்ளது.
2015-ஆம் ஆண்டில், உலகிலேயே இந்தியாவில்தான் மாசு காரணமாக அதிக அளவு (25 லட்சம் பேர்) உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கடுத்து சீனாவில் உயிரிழப்புகள் (18 லட்சம் பேர்) ஏற்பட்டுள்ளன.
மாசு காரணமாக ஒவ்வொரு ஆண்டும் 4.6 டிரில்லியன் டாலர்கள் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இது, உலகின் மொத்த உற்பத்தியில் 6.2 சதவீதம் ஆகும்.
ஆண்டுதோறும் நேரிடும் உயிரிழப்புகளில், 90 லட்சம் பேரின் உயிரிழப்புக்கு மாசுதான் காரணம் ஆகும். அதாவது மொத்த உயிரிழப்புகளில், 16 சதவீத உயிரிழப்புகள், மாசு காரணமாகவே நேரிடுகிறது.
மாசுகளால் பாதிக்கப்படுவது, உலகில் பொதுவான ஏழைகள் மற்றும் நடுத்தர மக்கள்தான் என்று அந்த ஆய்வு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


2030-ஆம் ஆண்டில் 60 ஆயிரம் பேர் மரணிப்பர்

பருவநிலை மாற்றப் பிரச்னைக்கு தீர்வு காணப்படாமல் போகும்பட்சத்தில், 2030-ஆம் ஆண்டில் காற்றில் ஏற்படும் மாசுபடுதலால் இறப்போரின் எண்ணிக்கை 60 ஆயிரமாகவும், 2100-ஆம் ஆண்டில் 2.60 லட்சம் பேராகவும் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக மற்றொரு ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.


தீபாவளிக்குப் பிறகு நகரங்களில்...

தீபாவளி பண்டிகைக்குப் பிறகு, தில்லி மற்றும் அதையொட்டிய பகுதிகளில் காற்றின் தரம் மிகவும் மோசமாகியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், கடந்த ஆண்டு நிலவரத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு நிலவரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக அத்தகவல்கள் கூறுகின்றன.
சென்னையைப் பொறுத்தமட்டில், தீபாவளி பண்டிகை காலத்தில் பட்டாசு விற்பனை 40 சதவீதம் குறைந்தபோதிலும், காற்று மாசு பலமடங்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக, தீபாவளி தினத்தன்று இரவில், காற்றில் மாசு அபாயகரமான அளவு இருந்துள்ளது.
மும்பை, மாலேகான், நவிமும்பை ஆகிய இடங்களிலும் இதே நிலைதான். 
அண்மையில் பெய்த மழையின் தாக்கத்தினால், மும்பையில் கடந்த 3 ஆண்டு தீபாவளி பண்டிகை நிலவரத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு காற்று மாசுபடுதல் குறைந்திருந்ததாக புணேயைச் சேர்ந்த ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.


சிறுநீரகங்களைப் பாதிக்கும்

அமெரிக்காவின் மிசௌரியைச் சேர்ந்த ஆய்வு நிறுவனத்தில் இயக்குநராக இருக்கும் ஜியாத்-அல்-ஆலி கூறியதாவது:
நாம் சுவாசிக்கும் காற்றானது, சுவாசக் குழாய் வழியாக, ரத்த நாளங்களுக்கு முதலில் செல்லும், பிறகு சிறுநீரகங்களுக்குச் செல்லும். நமது ரத்தத்தை சுத்திகரிக்கும் முக்கிய காரணிகளாகச் செயல்படும் சிறுநீரகங்கள், இந்த மாசை ரத்தத்தில் இருந்து வெளியேற்றும். இதுபோல், அதிகளவுக்கு மாசு வெளியேற்றப்படுவது சிறுநீரகங்கள் இயங்கும் திறனில் பாதிப்பைத் தரும். இதனால், சிறுநீரக நோய், மஞ்சள் காமாலை, ரத்த சுத்திகரிப்பு பாதிப்பு நோய் போன்ற நோய்கள் ஏற்படும்.
நிர்ணயிக்கப்பட்ட பாதுகாப்பான அளவைக் காட்டிலும், காற்றில் மாசு அளவு குறைந்திருந்தாலும், சிறுநீரகங்கள் பாதிக்கப்படும்; இதிலிருந்து, காற்று மாசுவுக்கு, பாதுகாப்பான அளவு என்பதை நிர்ணயிக்க முடியாது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

குழந்தைகளின் நினைவுத் திறன் குறையும்

காற்று மாசுபடுதலினால், குழந்தைகளின் நினைவுத் திறன் பாதிக்கப்படுவதும் புதிய ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது.
ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் பள்ளிக்கு நடந்துச் செல்லும் 7 முதல் 10 வயது வரையுடைய 1,200 குழந்தைகள் மத்தியில் ஆய்வு நடத்தப்பட்டது. சுமார் 12 மாதம் வரையிலும், குழந்தைகளின் செயல்படும் திறன், புரிந்து கொள்ளும் தன்மைகள் ஆராயப்பட்டன. 
அந்த காலக்கட்டத்தில், அக்குழந்தைகள் நடந்து செல்லும் பாதையில் நிலவிய காற்று மாசுபடுதலின் அளவும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன. அப்போது காற்று மாசுபடுதல் காரணமாக குழந்தைகள் நினைவுத் திறன் பாதிக்கப்படுவது தெரியவந்தது.

சுற்றுச்சூழல் சட்டங்கள் மறுஆய்வு

இந்தியாவில் கடந்த 2015-ஆம் ஆண்டில் காற்று, நீர் மாசுபாடு காரணமாக 25 லட்சம் பேர் உயிரிழந்துள்ளதாக ஆய்வுத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், சுற்றுச்சூழல் சட்டங்களையும், மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்ட சுற்றுச்சூழல் அமைப்புகளின் செயல்பாட்டையும் மறுஆய்வு செய்வதற்கு துணைச் சட்டங்களுக்கான நாடாளுமன்ற நிலைக் குழு முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக, அரசு வட்டாரங்கள் கூறியதாவது:
நாட்டின் தலைநகரான தில்லியிலும், இதர பெருநகரங்களிலும் மோசமான நிலையிலுள்ள காற்றின் தரத்தை மேம்படுத்துவதில் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயல்பாடுகளை மறுஆய்வு செய்வதற்கு, நாடாளுமன்ற குழு முடிவு செய்துள்ளது.
நாடு முழுவதும் சுற்றுச்சூழல் தொடர்பான விதிமுறைகளை அமல்படுத்துவதில், மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் எந்த அளவுக்கு வெற்றி கண்டுள்ளது? காற்றின் தரத்தை மேம்படுத்துவதில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு உள்ள பங்கு, காற்று மாசுபாட்டைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து விரிவாக அறிந்துகொள்ளவும் அந்த குழு முடிவு செய்துள்ளது.

தீபாவளி நாளில் பெரு நகரங்களில் காற்றின் தரக் குறியீடு (மைக்ரோ கிராம் அளவில்)

                   2017 2016
தில்லி     319 431
மும்பை 305 278
சென்னை 263 291

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com