உத்தரப் பிரதேச மாநிலம், காஜிபூரில் ஆர்எஸ்எஸ் தொண்டர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
காஜிபூரைச் சேர்ந்த ராஜேஷ் மிஸ்ராவும் (40), அவரது சகோதரர் அமிதேஷ் மிஸ்ராவும் பிரம்மன்புரா சட்டி பகுதியில் உள்ள தங்களுக்கு சொந்தமான இடத்தில் அமர்ந்து கொண்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 3 பேர், மிஸ்ரா மீது திடீரென துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர்.
இதில் ராஜேஷ் மிஸ்ரா தலையில் தோட்டா பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரை காப்பாற்ற வந்த சகோதரர் அமிதேஷ் துப்பாக்கித் தோட்டா
பாய்ந்து காயமடைந்தார்.
இதையடுத்து, துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம நபர்கள், மோட்டார் சைக்கிளில் தப்பியோடி விட்டனர். காயமடைந்த அமிதேஷ், காஜிபூர் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக வாராணசி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ராஜேஷ் மிஸ்ரா, ஆர்எஸ்எஸ் அமைப்பின் தொண்டராக இருந்தார். மேலும் பத்திரிகையிலும் பணியாற்றி வந்தார். அவரை மர்ம நபர்கள் எதற்காக சுட்டுக் கொன்றனர் என்பது தெரியவில்லை.
இதுகுறித்து காவல்துறை ஏடிஜி அனந்த் குமார் கூறுகையில், "துப்பாக்கிச் சூடு நடத்திய நபர்கள் 3 பேரில், 2 பேரின் அடையாளம் கண்டறியப்பட்டு விட்டது. விரைவில் அனைவரும் கைது செய்யப்படுவர்' என்றார்.