மும்பை உயர் நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து, மகாராஷ்டிர மாநில அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள், தங்களது வேலைநிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மகாராஷ்டிர மாநில அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள், கடந்த 16-ஆம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனால், அரசுப் பேருந்துகளின் இயக்கம் பெருமளவில் முடங்கியது. தீபாவளி நேரம் என்பதால், வெளியூர்களுக்கு செல்லும் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகினர்.
இதனிடையே, இந்த வேலைநிறுத்தத்துக்கு எதிராக மும்பை உயர் நீதிமன்றத்தில் 2 பொது நல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றில், "மகாராஷ்டிர அரசு பேருந்துகளில் தினமும் சுமார் 65 லட்சம் பேர் பயணிக்கின்றனர். போக்குவரத்து ஊழியர்களின் திடீர் வேலைநிறுத்தம் காரணமாக பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்' என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த மனுக்கள் மீது உயர் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை மாலையில் விசாரணை நடைபெற்றது. அப்போது, போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம் சட்டவிரோதமானது என்று தெரிவித்த நீதிபதி எஸ்.கே.ஷிண்டே, ஊழியர்கள் உடனடியாக பணிக்குத் திரும்பவும் உத்தரவிட்டார். மேலும், போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகளை பரிசீலிப்பதற்காக அரசால் அமைக்கப்பட்ட குழு, வரும் 15-ஆம் தேதிக்குள் இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த உத்தரவைத் தொடர்ந்து, தங்களது வேலைநிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக, போக்குவரத்து ஊழியர் சங்கங்கள் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் அறிவித்தன. இதையடுத்து, ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்பினர். கடந்த 4 நாள்களாக நீடித்த போராட்டம் முடிவுக்கு வந்தால், பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.