அகமதாபாத்: பாரதிய ஜனதா கட்சியில் சேருவதற்கு தமக்கு ரூ.1 கோடி பேரம் பேசப்பட்டதாக பட்டேல் சமூக தலைவர்களில் ஒருவரான நரேந்திர பட்டேல் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.
குஜராத் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் செல்வாக்கான நபர்களை வளைத்துப் போடுவதில் கட்சிகள் அசுர வேகத்தில் உள்ளன.
பட்டேல் சமூகத்துக்கு இடஒதுக்கீடு கொடு அல்லது இடஒதுக்கீட்டு முறையையே ஒழித்துக் கட்டு என முழங்கிய ஹர்திக் பட்டேல் தலைமையிலான இயக்கத்துக்கு இந்த தேர்தலில் மவுசு அதிகரித்து வருவதாகவும், காங்கிரஸுக்குதான் பட்டேல் சமூகத்தினர் ஆதரவளிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆனால், பட்டேல் போராட்ட குழு தலைவர்களை வழக்கம் போல பேரம் பேசி இழுப்பதில் பாஜகவினர் தீவிரமாக உள்ளனர்.
இந்நிலையில், ஹர்திக் பட்டேல் இயக்கத்தின் முக்கிய நபர்களாக இருந்த வருண் பட்டேல், ரேஷ்மா பட்டேல் உள்ளிட்டோர் அண்மையில் பாஜகவில் இணைந்தனர்.
இந்நிலையில், ஹர்திக் படேலுக்கு நெருக்கமான நரேந்திர பட்டேல் அகமதாபாத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, கடந்த மாதம் ஹர்திக் பட்டேல் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மூன்று பேர் மீது போலீஸில் புகார் செய்தனர். பின்னர் அதை திரும்பப் பெற்றனர். சனிக்கிழமை மாலை பிஜேபியில் சேர்ந்த வருண் பட்டேல், குஜராத் பாஜக தலைவர் ஜித்தூபாயை சந்திக்க வக்னியும் மற்ற தலைவர்களும் என்னை அழைத்து வந்தனர்.
"வருண், காந்திநகரில் என்னை பார்த்த பின்னர் பாஜகவின் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு ஜித்துபாய் வாகனிக்கும் சில அமைச்சர்களுக்கும் என்னை அறிமுகப்படுத்தினார். அவர் என்னை ஒரு அறைக்கு அழைத்துக்கொண்டு, 10 லட்ச ரூபாய் பணத்தை முன்பணம் என்றும் மீதி ரூ.90 லட்சமும் நாளை (இன்று) கொடுப்பதாக எனக்கு வாக்குறுதி அளித்ததாக செய்தியாளர்களிடம் நரேந்திர பட்டேல் கூறினார்.
பாஜக மீது குற்றச்சாட்டுகளை முன்வைப்பதற்கு சில மணிநேரத்திற்கு முன்பே பாஜகவில் இணைந்த அவர் கூறுகையில், "இது மிகவும் அவசரமாக நடந்தது. அவர்கள் என்னை உடனடியாக ஊடகங்களுக்கு பேட்டி அளிக்க அழைத்தனர். அதனால் செய்தியாளர்கள் சந்திப்பை உடனடியாக செய்ய வேண்டியிருந்தது" என்றார்.
அத்துடன் தமக்கு கொடுக்கப்பட்ட பணத்தையும் செய்தியாளர்களிடம் நரேந்திர பட்டேல் காண்பித்தார். இருப்பினும் இந்த குற்றச்சாட்டை பாஜகவில் இணைந்த வருண் பட்டேல் மறுத்துள்ளார்.
பாஜக செய்தித் தொடர்பாளர் பரத் பாண்டியா கூறுகையில், "நரேந்திர பட்டேலின் திருப்பம் முன்பே திட்டமிடப்பட்ட நாடகம் ஆகும். இந்த நாடகத்தால் காங்கிரஸ் கட்சியால் குஜராத் மக்களை ஆள முடியாது" என்றார்.
நரேந்திர பட்டேல் வடக்கு குஜராத்தில் பாடிதர் அனாமத் அண்டோனான் சமிதிக்கு ஒருங்கிணைப்பாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.