கெளஹாத்தி: காந்தி, நேரு எல்லாம் குப்பை போன்றவர்கள் என்று பொதுக்கூட்டம் ஒன்றில் அஸ்ஸாம் மாநில பாரதிய ஜனதா கட்சி எம்.பி காமக்யா பிரசாத் டஸ்ஸா பேசியிருப்பது கடும் சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளது.
அஸ்ஸாம் மாநில ஜோர்ஹட் தொகுதியின் பாரதிய ஜனதா கட்சி எம்.பியாக இருப்பவர் காமக்யா பிரசாத் டஸ்ஸா. ஆதிவாசி இனத்தைச் சேர்ந்தவரான இவர் தற்பொழுதுதான் முதல்முறையாக நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் சனிக்கிழமை அன்று கிழக்கு அஸ்ஸாமின் சாரைடியோ மாவட்டத்தில் உள்ள சோனரி என்ற இடத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பங்கேற்றார். அந்த கூட்டத்தில் அவர் பேசும் பொழுது, 'காங்கிரஸ் கட்சியானது தீனதயாள் உபாத்யாயா உள்ளிட்ட வர்களை பற்றி அறியாமலேயே, பொதுமக்களின் மூளைகளை காந்தி மற்றும் நேரு உள்ளிட்ட குப்பைகளை கொண்டு கழுவியுள்ளது என்று பேசினார்.
இவர் அவ்வாறு பேசும் பொழுது மேடையில் அசாம் மாநில முதல்வர் சார்பானந்தா சோனோவால் அமர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது இந்த பேச்சினை எதிர்க்கட்சியான காங்கிரஸ் கடுமையாக கண்டித்துள்ளது. அத்துடன் நேற்று காமக்யா பிரசாத் மீது காவல் துறையில் குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோரி புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் காமக்யா பிரசாத்தினை ஞாயிறன்று கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் அவரது உருவ பொம்மை எரிக்கப்பட்டது.அத்துடன் அவரை கைது செய்யவும் கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டது.