புதுதில்லி: ஜிஎஸ்டி வரி கணக்கிணை முறைப்படி தாக்கல் செய்யாதவர்களுக்கு, திட்டமிட்டிருந்த ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கான அபராதத் தொகை தள்ளுபடி செய்யப்படும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி டிவிட்டரில் தகவல் தெரிவித்துள்ளார்.
ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி, கடந்த ஜூலை ஒன்று முதல் முறைப்படி இந்தியா முழுமைக்கும் அமலுக்கு வந்தது. இதன்படி பயனாளர்கள் குறிப்பிட்ட நேரத்துக்குள் ஜிஎஸ்டி வரி கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும். அவ்வாறு தாக்கல் செய்யாதவர்களுக்கு தாமதம் ஆகும் ஒவ்வொரு நாளுக்கும் ரூ.100 வீதம் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் முதல் தடவைக்கான சிக்கல்களை கணக்கில் கொண்டு, அறிமுக ஜிஎஸ்டி வரி கணக்கைத் தாக்கல் செய்யாதவர்களுக்கு முதல் மாதமான ஜூலை மட்டும், அபராதத்திலிருந்து விலக்கு அளிக்க ஜிஎஸ்டி ஆணையம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது. அதற்காக மத்திய அரசு முன்னரே உத்தரவும் பிறப்பித்திருந்தது.
இந்நிலையில் தற்பொழுது ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களிலும், ஜிஎஸ்டி வரி தாக்கல் செய்யாதவர்களுக்கு அபராதத் தொகை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இது பற்றிய தகவலை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.