கொல்கத்தா: என் மொபைல் இணைப்பே துண்டிக்கப்பட்டாலும் சரி, என் ஆதார் எண்ணை மொபைல் எண்ணுடன் இணைக்க மாட்டேன் என்று திரிணமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் மையக் குழுக் கூட்டம் கொல்கத்தாவில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்டு அக்கட்சித் தலைவி மம்தா பானர்ஜி பேசியதாவது:
மத்திய அரசானது பொதுமக்களின் உரிமைகளிலும் சுதந்திரத்திலும் தொடர்ந்து தலையிடுகிறது. ஒருவரது ஆதார் எண்ணை அவரது மொபைல் எண்ணுடன் இணைக்க கூடாது. என் மொபைல் இணைப்பே துண்டிக்கப்பட்டாலும் சரி, என் ஆதார் எண்ணை மொபைல் எண்ணுடன் இணைக்க மாட்டேன்.
மத்தியி ல் ஒரு எதேச்சதிகார அரசை கட்டவிழ்த்து விட்டுள்ளனர். அதற்கு எதிராக யாரும் குரல் எழுப்ப முடிவதில்லை. இல்லாவிட்டால் அவர்கள் மீது வருமான வரித்துறை, அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ மூலம் மிரட்டும் பணி நடக்கிறது.
கட்சியின் எல்லா தலைவர்களும் சிறைக்குச் சென்றாலும் எங்களின் போராட்டம் தொடரும். நாங்கள் ஒன்றும் கோழைகள் அல்ல. நாங்கள் மத்தியில் ஆட்சிக்கு வர விரும்பாவிட்டாலும், தில்லியில் உள்ள அர சினை அகற்ற உதவுவோம்.
இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.