ஆர்.கே.நகர் தேர்தல் அறிவிப்பு எப்போது? தலைமைத் தேர்தல் ஆணையர் பதில்!
புதுதில்லி: தற்பொழுது குஜராத் சட்டப்பேரவை தேர்தல் பற்றி மட்டுமே ஆலோசித்து தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன; இடைத்தேர்தல்கள் எதுவும் பற்றி ஆலோசனை நடத்தப்படவில்லை என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஜோதி தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநில சட்டப்பேரவையின் ஆயுள் காலம் வரும் ஜனவரி மாதத்துடன் முடிவடைவதால், தில்லியில் இன்று காலை தலைமை தேர்தல் ஆணையர் அக்ஸல் குமார் ஜோதி மற்ற இரு தேர்தல் ஆணையர்களுடன் செய்தியாளர்களை சந்தித்து தேர்தல் தேதிகளை அறிவித்தார்.
அதன்பின்னர் ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தல் அறிவிப்பு எப்போது வெளிவரும் என்று செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:
தற்பொழுது குஜராத் சட்டப்பேரவை தேர்தல் பற்றி மட்டுமே இரண்டு தேர்தல் ஆணையர்களுடன் ஆலோசித்து, தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. நாட்டில் பிற மாநிலங்களில் சில இடைத்தேர்தல்கள் நடைபெற வேண்டியுள்ளது. ஆனால் அவை பற்றி எதுவும் தற்பொழுது ஆலோசனை நடத்தப்படவில்லை.
அவற்றுக்கான தேதிகள் குறித்து ஆலோசனை நடைபெறும் பொழுது ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் தேதியும் அறிவிக்கப்படும்.
இவ்வாறு அக்ஸல் குமார் ஜோதி தெரிவித்தார்.