மும்பையின் பாந்த்ரா குடியிருப்புப் பகுதியின் அருகில் பெஹ்ராம்படா ரயில் நிலையம் அமைந்துள்ளது.
இங்கு வியாழக்கிழமை மாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ரயில் நிலையம் முழுவதும் வேகமாக தீ பரவி வருகிறது.
மேலும், ரயில் நிலையத்தின் அருகில் உள்ள குடிசைப் பகுதிகளுக்கும் தீ வேகமாகப் பரவி வருகிறது. ரயில் நிலையத்தின் அனைத்துப் பகுதிகளிலும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் அந்த ரயில் நிலையத்தில் உள்ள 300x300 அளவிலான நடைமேடை பகுதிகளிலும் தீ பரவியுள்ளது.
இந்நிலையில், சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்த போராடி வருகின்றனர். இவ்விபத்தை அடுத்து 16 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 12 நீர்த்தொட்டிகள் ஆகியவற்றின் உதவியுடன் தீயணைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த பயங்கர தீ விபத்தில் இதுவரை உயிர்ச்சேதம் ஏற்படவில்லை என காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. தீ விபத்து காரணமாக ரயில் சேவைகளில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என மேற்கு ரயில்வே மக்கள் தொடர்புத்துறை அதிகாரி தெரிவித்தார்.