கர்நாடக மாநிலத்தின் மங்களூருவில் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் எம்.கே.கணபதி பணியாற்றி வந்தார். இந்நிலையில், கடந்த வருடம் ஜுலை 7-ந் தேதி குடகு என்ற இடத்தில் உள்ள தனியார் விடுதியில் தற்கொலை செய்துகொண்டார்.
அதற்கு முன்னதாக அமைச்சர் ஜார்ஜ், காவல்துறை அதிகாரிகள் பிரசாத், பிரணாப் உள்ளிட்டோர் தான் தனது தற்கொலைக்கு காரணம் என்று விடியோ பதிவிட்டு வெளியிட்டார். இதுதொடர்பாக காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது.
ஆனால், இந்த விசாரணையில் தனக்கு உடன்பாடு இல்லை என உயிரிழந்த துணைக் கண்காணிப்பாளரின் தந்தை எம்.கே.குஷலப்பா வருத்தம் தெரிவித்தார். மேலும் தனது மகன் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை மேற்கொள்ள வேண்டும் என கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இதனைத் தொடர்ந்து இவ்வழக்கு மீதான விசாரணை செப்டம்பர் 5-ந் தேதி சிபிஐ-க்கு மாற்றப்பட்டது.
இவ்வழக்கு தொடர்பாக அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ் முதல் குற்றவாளியாகவும், பெங்களூரு லோக்ஆயுக்தா ஐ.ஜி. ப்ரணவ் மோஹாந்தி, கர்நாடக புலனாய்வுத்துறை ஏ.டி.ஜி.பி. ஏ.எம்.பிரசாத் ஆகியோர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இவ்விவகாரம் தொடர்பாக அமைச்சர் ஜார்ஜ் உடனடியா உடனடியாக அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட வேண்டும் அல்லது மாநிலம் முழுவதும் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அக்கட்சித் தலைவரும், கர்நாடக முன்னாள் முதல்வருமான எடியூரப்பா கூறினார்.
இருப்பினும் வழக்கு சிபிஐ வசம் இருப்பதால் தனது அமைச்சர் பதவியில் இருந்து ஜார்ஜ் விலகத் தேவையில்லை என கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். மேலும், அவரது அமைச்சர் பதிவியைக் கொண்டு எவ்வித ஆதாயமும் தேடப்போவதில்லை என்றும் கூறினார்.
இது தன் மீது சுமத்தப்பட்ட வீண் பழி, இந்த மரணத்துக்கும் தனக்கும் சம்பந்தமில்லை. இவை அனைத்தும் வேண்டும் என்றே அரசியல் ரீதியாக தனது மதிப்பை குறைக்க நடப்பதாக குற்றம்சாட்டப்பட்ட அமைச்சர் ஜார்ஜ் தெரிவித்தார்.