கொல்கத்தா: தன் மனைவியின் கர்ப்பத்தில் இருப்பது பெண் குழந்தை என்று தெரிந்த உடன், அவளை அடித்தே கொன்ற கணவனை காவல்துறை கைது செய்துள்ளது.
மனதினை பதறச் செய்யும் இந்தச் சம்பவம் மேற்கு வங்கத்தின் பிர்பும் மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது.அங்குள்ள இலம்பசர் பகுதியில் நேற்றிரவு, குறிப்பிட்ட அந்த கர்ப்பிணி பெண்ணை அவரது கணவன், அவரது தாயார் மற்றும் மாமியார் ஆகியோர் அடித்து துன்புறுத்தி, கொடுமை செய்து கொன்றுள்ளனர்.
உள்ளூர் பகுதி மக்களின் கூற்றுப்படி கர்ப்பமாக உள்ள அந்தப் பெண்ணுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னால், கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தினைக் கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது. நேற்று வெளியான அந்த சோதனையின் முடிவில், அந்த பெண்ணின் கருவிலிருப்பது பெண் குழந்தையென்று கண்டறியப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கணவன், அவரது தாயார் மற்றும் சகோதரி ஆகியோர் இணைந்து அந்த கர்ப்பிணிப் பெண்ணை தொடர்ந்து தாக்கி, துன்புறுத்தி கொடுமை செய்து கொன்றுள்ளனர்.
இது தொடர்பாக பெண் வீட்டார் அளித்த புகாரின் பேரில் கணவன் மற்றும் அவரது சகோதரி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள அந்த பெண்ணின் மாமியாரை போலீசார் தேடி வருகின்றனர்.
கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தினைக் கண்டறியும் சோதனை இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள போதிலும், இத்தகைய செயல்கள் சட்ட விரோதமாக நடந்து வருவது வருத்தமளிக்கும் ஒன்றாக உள்ளது.